டச் ஸ்க்ரீன் உருவான வரலாறு



ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு, அதை கட்டைவிரலாலும், ஆட்காட்டி விரலாலும் தேய் தேய் என்று தேய்ப்பதுதான் உலகில் நடக்கும் முக்கிய வேலை. அதுவும் போன தலைமுறை ஆட்களுக்கு, இதில் அதிக ஜாலி உண்டு. காரணம், ஸ்மார்ட்போனுக்கு முன், பட்டன் போனையும் பயன்படுத்திய அனுபவம் உள்ளவர்கள் அவர்கள். சரி, தொட்டால் மலரும் இந்த டச் ஸ்க்ரீன் என்ற தொடுதிரை உருவான வரலாறு தெரியுமா?

எப்படி இயங்குகிறது?


இன்று பரவலாக, ஏ.டி.எம்., மெஷின்கள், டிக்கெட் கவுன்டர்கள், கார் மேப் சிஸ்டம், இயந்திரக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் என்று பல இடங்களிலும், தொடுதிரை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி பிறந்தது என்பதற்கு முன்னர், இது எப்படி இயங்குகிறது என்ற சிறிய அறிவியல் நிகழ்வையும் தெரிந்துகொள்ள வேண்டும். தொடுதிரை கண்ணாடிக்கு கீழ் சென்சார்கள் இருக்கும். இதில், எப்போதும் மின்னோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இச்சூழலில் நம்முடைய விரல்களால் திரையைத் தொடும்போது, அங்கு அழுத்தம் ஏற்படும் அல்லவா?. அதனால், மின்சார ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மின்னழுத்தம் உருவாகும். நாம் எந்த இடத்தை தொடுகிறோம் என்பதை, மின்னழுத்த சிக்னல்களை வைத்து மென்பொருள் புரிந்துகொள்ளும். அதற்கேற்ப செயற்பாடுகள் நடக்கின்றன. இதுதான், தொடுதிரை மந்திரம்.

விரலசைவில் கட்டளைகள்


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அதுவரை, வெறும் கருத்து ரீதியாக இருந்த தொடுதிரையை, எப்படி நடைமுறையில் சாத்தியமாக்குவது என்ற அறிவியல் வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தார் ஜான்சன்.

இந்நிலையில், முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்தான். அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. தற்போது நாம் பார்க்கும் ஒளிஊடுருவும் தன்மை கொண்ட தொடுதிரையை அவர் உருவாக்கவில்லை. எனினும், தொடுதிரை மூலம் நாம் செய்யும் உள்ளீடுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப சில நகர்வுகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பமாக அது இருந்தது.

இத்தொழில்நுட்பம், அந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவியல் உலகத்தால் பாராட்டப்பட்டது. தொழிற்துறையினரும் இந்த தொழில்நுட்பத்தை வளர்க்கப் பெரிதும் ஆர்வம் காட்டினர். இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது.

பின்னர், பல்கலைக்கழக வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். அதில், எலோகிராஃப் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வேலைகளைத் தீவிரமாகச் செய்தார். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். அதன்பின்னர், 1977ல், சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன் செய்யப்பட்ட அடுத்தகட்ட ஆய்வில், பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட், தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் தொடுதிரை.

பரவலான தொடுதிரை
1983ல் கணினித் தயாரிப்பு நிறுனமான ஹெச்.பி. நிறுவனம் ( ஹெவ்லெட் பாக்கர்ட் ), தொடுதிரை வசதியுடன் கூடிய ஹெச்.பி.-150 (HP-150) என்ற வீட்டுக் கணினியை அறிமுகம் செய்தது. அகச்சிவப்பு கதிர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது இந்தத் தொழில்நுட்பம். எனினும், அகச்சிவப்பு கதிர்கள் அதிக தூசை கவர்ந்திழுத்த படியால், அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.

1993ல் ஆப்பிள் நிறுவனம் நியூட்டன் பி.டி.ஏ. (Newton PDA ) என்ற கருவியை வெளியிட்டது. இதில், திரையிலேயே நேரடியாக எழுதக் கூடிய வசதி இருந்தது.

1994ல் ஐ.பி.எம். நிறுவனம் மைசன் (Simon) போனை வெளியிட்டது. இதுதான், உலகின் முதல் ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது. காலண்டர், நோட்பேட் வசதிகளோடு, போன் எண்ணை திரையில் அழுத்தி டயல் செய்யும் வசதி இதில் இருந்தது.

அதைத் தொடர்ந்து பால்ம் (Palm) நிறுவனம் ஏராளமான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வந்தது.

2002ல், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தொடுதிரையுடன் கூடிய விண்டோஸ் எக்ஸ்.பி. டாப்லட்டை வெளியிட்டது.

2007ம் ஆண்டுதான், டச் ஸ்கிரீனுக்கு முக்கிய ஆண்டு. ஆம், அந்த ஆண்டு முதற்கொண்டுதான் தொடுதிரை உலக மக்களின் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு ஸ்மார்ட்போன்களின் அரசனான ஆப்பிள் நிறுவனமே காரணம். ஐபோன் என்ற கலக்கலான ஸ்மார்ட்போனை வெளியிட்டு, ஆப்பிள் நிறுவனம் தொடுதிரை தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. தற்போது, தொடுதிரை இல்லாத இடத்தையே பார்க்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

என்னவாகும் எதிர்காலம்?

தற்போதுள்ள தொடுதிரை தொழில்நுட்பமே, நமது விரல் நுனியை மிகத்துல்லியமாக உணர்ந்துகொண்டு செயற்படும் அளவுக்கு வளர்ந்துவிட்டன. இந்த துல்லியத்தன்மை நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு இன்னும் வளரப்போகிறது. மின்சாரம் தேக்கும் திறனில் ஏற்படும் மிகச்சிறிய அளவு மாற்றங்களைக்கூட துல்லியமாக உணரும் திறன் வாய்ந்த தொடு திரைகளை, நுண்ணிய கிருமிகள் அல்லது நோய்க் குறிகளை அறிந்துகொள்ளவும் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கான ஆராய்ச்சிகளில் ஏராளமான முன்னேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உடல்நல பரிசோதனைகளை செய்யும் ஒரு குட்டி ஆய்வகமாக, தொடுதிரை ஸ்மார்ட்போன் மாறுவதற்கு நிறைய சாத்தியங்கள் உண்-டு.

Comments