மொபைல் போனின் பரிணாம வளர்ச்சி


இன்றைய அலைபேசி என்பது, வெறும் பேச்சுக்கான சாதனம் என்பதை தாண்டி, சகல விஷயங்களையும் செய்து முடிக்கும் கையடக்க கணினியாகவே வளர்ச்சியடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு தெரிகிற கம்பி இணைப்பு எதுவும் இல்லாமலேயே, உலகின் எந்த மூலைக்கும் தொடர்புகொண்டு அவர்களின் முகத்தை பார்த்தபடியே உரையாட முடியும். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்னர், எந்த வயர் இணைப்பும் இல்லாத நடாமாடும் தொலைபேசி என்கிற யோசனையை, ஏதோ மாயாஜாலம் போல்தான் மக்கள் நினைத்தார்கள். ஆனால், விஞ்ஞானிகளின் இடையறாத முயற்சி, மக்களின் விசித்திர சிந்தனையை எதார்த்தத்தில் சாத்தியமாக்கியுள்ளது.
1876ல் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கம்பி இணைப்பு தொலைபேசியை கண்டுபிடித்தார் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால், கம்பியில்லாமல் கையிலேயே எடுத்துசெல்லும் தகவல் தொடர்பு கருவியை உருவாக்க வேண்டும் என்ற விஞ்ஞானிகளின் தாகம், 1920களில் அலைபேசிகளுக்கான முயற்சிகளுக்கு அடிப்படையாய் அமைந்தது.
1940ல், இரண்டாம் உலகப் போரில், இராணுவ பயன்பாட்டுக்காக ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் எனப்படுகிற ரேடியோ அலைவரிசையின் மூலம் இயங்கக்கூடிய தகவல் தொடர்பு சாதனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இக்கருவி மூலம், 2 முதல் 4 வார்த்தைகள் மட்டுமே ஒரு நேரத்தில் பரிமாறிக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
இதன் பின்னர் 1946ல், அமெரிக்காவின் சிகாகோவில், பெல் சிஸ்டம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், நடமாடும் தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியது. கார் போன்ற வாகனங்களிலேயே அவை பொருத்தப்பட்டிருந்தன. அந்த அலைபேசியின் எடை 36 கிலோ ஆகும். இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது. நடமாடும் அலைபேசி என்று அது சொல்லப்பட்டாலும், கணினி போலவே அலைபேசியும் பெரியதாக இருந்தே, சிறிய அளவாக மாறியிருக்கின்றன.
1956ல் SRA/எரிக்ஸன் MTA (SRA/Ericsson MTA (Mobile Telephone System A)) என்ற மிகப்பெரிய மொபைல்போன் முதன் முதலில் ஸ்வீடனில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1956 முதல் 1967 வரை (11 ஆண்டுகள்) வெறும் 125 பயனாளர்கள் தான் இருந்தார்கள். காரணம், அந்நகரில் ஒரே சமயம் மூன்று இணைப்புகள்தான் மேற்கொள்ள முடியும், அதிக கட்டணம் போன்ற பல சிரமங்கள் இருந்தன.
கையடக்க அலைபேசி
அதன் பின்னர் நடமாடும் தொலைபேசி என்பதன் மீதான ஈர்ப்பு மெதுவாக அதிகரிக்கத்தொடங்கியது. 1973ம் ஆண்டில் மோட்டரோலா நிறுவனத் தலைவர் ஜான் பிரான்சிஸ் மிட்சல் தலைமையில் முதலாவது கையடக்க அலைபேசி (DynaTAC 8000X) தயாரிக்கப்பட்டது. அதுதான், இன்றைய அலைபேசிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த கண்டுபிடிப்பாகும்.
1973ம் ஆண்டு ஏப்ரல் 3ல், நியூஜெர்சியில் அமைந்துள்ள பெல் சிஸ்டம் தலைமை அலுவலகத்துக்கு (மோட்டரோலாவின் போட்டி கம்பெனி), மான்ஹாட்டன் மிட்டவுனில் இருந்து மோட்டரோலா கம்பெனி பொறியியலாளர் மார்ட்டின் கூப்பர் என்பவர் போன் செய்து, ‘நான் மொபைல் போனில் இருந்து பேசுகிறேன்’ என்று வெறுப்பேற்றினார். இதுவே, நவீன அலைபேசியின் முதல் அழைப்பு என்று கருதப்படுகிறது. அந்த மொபைல் போன் 1.1 கிலோ எடை இருந்தது. 10 மணி நேரம் சார்ஜ் செய்தால், 30 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம்.
பின்னர், மோட்டோரோலா நிறுவனம் பத்து ஆண்டுகள் அந்த மொபைல் போனை மெருகேற்றி 1983ல், பொது சந்தைக்கு விற்பனைக்காக வந்தது. 6 மணி நேரம் சார்ஜ் செய்தால், 30 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். அதில், 30 மொபைல் நம்பர்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த அலைபேசி அன்றைய இந்திய மதிப்பில், 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இந்த மொபைல் போன் புகழடையத் தொடங்கியது.
அதன் பின்னர் தொடர்ந்து பல நிறுவனங்கள் அலைபேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன. செங்கல் போன்ற வடிவிலான அலைபேசியில் இருந்து, மோட்டோரோலா நிறுவனம் தான் சற்றே சிறிய வடிவிலான அலைபேசியை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் 1989ம் ஆண்டிலும், 1994ம் ஆண்டிலும் மீண்டும் மோட்டோரோலா நிறுவனம் பற்பல வடிவ மற்றும் தொழில்நுட்ப மாறுதல்களை கொண்டு வந்தது.
அதைத் தொடர்ந்து, 1997ம் ஆண்டில் நோக்கியா அலைபேசி நிறுவனம் மொபைல் துறைக்குள் புகுந்து பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்தது. 2002ம் ஆண்டில் ப்ளாக்பெர்ரி, 2007ல் ஆப்பிள் ஐபோன், சாம்சங் எனத் தொடர்ந்து, பல நிறுவனங்கள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு அலைபேசிக்கு நவீன பாதையமைத்து கொண்டு வந்தன. இவையே இன்றைய நவீன ஸ்மார்ட் போன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்குத் தகவல்களை எளிமையாகவும், உடனுக்குடன் கொண்டு சேர்க்கவுமே. இன்றைக்கு எவ்வளவோ அசம்பாவிதங்களைத் தடுப்பதற்குப் பயனுள்ள சேவையாக அலைபேசி இருந்து வருகிறது. அதை நாம் எப்படிப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோம் என்பது பயன்படுத்துவோரின் மனநிலையைப் பொறுத்து இருக்கிறது.
இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்குக் கிடைத்துள்ள அலைபேசி என்னும் அற்புதமான ஆயுதத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கத்தைச் சரியாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும்.
↔- – மு.கோபி

Comments