உரசினால் பற்றிக்கொள்ளும் தீக்குச்சி எப்படி உருவானது?




மனிதர்களின் கலாச்சார முன்னேற்றத்துடன் நெருப்புக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. ஆதிமனிதர்கள் கற்களை உரசி நெருப்பை உருவாக்கினார்கள் என்றால், நவீன மனிதர்கள் நெருப்பெட்டியில் குச்சியை உரசி நெருப்பை உண்டாக்குகிறார்கள். கற்களை உரசி நெருப்பை உருவாக்குவதுடன் ஒப்பிட்டால், நெருப்பெட்டி மூலம் தீயை உருவாக்குவது என்பது எத்தனை எளிமையானது?!
19ம் நூற்றாண்டில், இங்கிலாந்தை சேர்ந்த ஜான் வாக்கர் என்பவரே,நெருப்பெட்டியை கண்டுபிடிக்க அடித்தளமிட்டார். சில காலம் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய அவருக்கு, வேதியியல் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர், சொந்த ஊருக்கு திரும்பிய அவர், மருந்து கடையை ஆரம்பித்தார். மருந்துகளை உருவாக்க, பல்வேறு வேதியியல் பொருட்களோடு அவர் புழங்க வேண்டியிருந்தது. ஒருநாள், அவர் உருவாக்கிய வேதியியல் கலவை, திடீரென்று தரையில் உரசி எரிவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அதைத்தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில், ஆண்டிமோனி சல்பைடு (antimony sulfide), பொட்டாசியம் குளோரேட்டு (potassium chlorate), கோந்து (gum) மற்றும் ஸ்டார்ச் ஆகிய மாவுப்பொருட்களை சேர்த்து, சொரசொரப்பான தளத்தில் தேய்த்தால் தீப்பற்றும் என்பதைக் கண்டுபிடித்தார், நெருப்பை மூட்ட எளிய வழியை கண்டறிந்த அவர், கார்டுபோர்டு அட்டையில் அந்த கலவையை பூசி, மக்களுக்கு விற்பனையை தொடங்கினார். மக்களும் தீப்பொறி அட்டையை ஆர்வமாக வாங்கிச்சென்றனர். பின்னர், கார்டுபோர்டு அட்டைக்கு பதிலாக மரக்குச்சியை மாற்றி, அதில் கலவையை பூசி விற்பனை செய்தார். அதற்கு அவர், காங்கிரீவ்ஸ் ("Congreves") என்று பெயரிட்டார். உரசி பற்ற வைப்பதற்காக, சொரசொரப்பான உப்புத்தாளையும் வழங்கினார்.
எனினும், தீக்குச்சியை பற்ற வைக்கும்போது, கலவை மட்டும் மிக வேகமாக தீப்பிடித்து எரிவதோடு, நெருப்பு உடைந்து கீழேயும் விழுந்தது. சில நேரம், நெருப்பெட்டியை வைத்திருப்பவரின் மேலும் நெருப்பு விழுந்ததால் தீவிபத்துகள் ஏற்பட்டன. இதனால், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் காங்கிரீவ்ஸ் தீப்பெட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதையடுத்து, 1830 இல் பிரான்சியர் சார்லஸ் சவுரியா (Charles Sauria) என்பவர் தீக்குச்சியின் நுனியில் உள்ள மருந்தில் வெள்ளைப் பாஸ்பரஸைச் சேர்த்து, காற்றுப் புகாத உலோக பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்தார். இதனால் தீக்குச்சியின் கெட்ட வாடை குறைந்தது, மக்கள் இந்த தீப்பெட்டிகளை விரும்பி வாங்கி சென்றனர். இந்நிலையில், வெள்ளைப் பாஸ்பரஸ் பயன்படுத்துவதால் இத் தீக்குச்சிகளை உற்பத்தி செய்வோர்களுக்கு தாடை மற்றும் பல எலும்பு தொடர்பான நோய்களும் ஊனங்களும் தோன்றின. தீப்பெட்டியில் இருந்த பாஸ்பரஸ் ஒருவரைக் கொல்லும் அளவுக்கு இருந்தது. இதனால் வெள்ளை பாஸ்பரஸ் தீப்பெட்டிகளுக்கு அதிகம் எதிர்ப்பு தோன்றியது.
இதைத்தொடர்ந்து, இந்தியா (1919) உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் வெள்ளை பாஸ்பரஸ் தீப்பெட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், தீப்பெட்டி உற்பத்தி பெரும் நெருக்கடிக்கு ஆளானது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, புதிய முறையிலான பாதுகாப்பான தீப்பெட்டி தயாரிப்பு முறை உருவாக்கப்பட்டது. அதாவது, பெட்டியின் இரு வெளிப்புற பக்கங்களிலும் சிகப்பு பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையிலான தீப்பெட்டிகள் உருவாக்கப்பட்டன. இதையே நாம் இன்று பயன்படுத்தி வருகிறோம்.


சீனா குச்சி

சீனாவில் கி.பி. 577 ஆண்டில், பைன் மர குச்சிகளில் கந்தகத்தை (சல்ஃபர்) பூசி பயன்படுத்தி வந்தனர். வெளிச்சம் தேவையானபோது, சிறிது நெருப்பை அந்த குச்சியின் மேல் வைத்தால் போதும், மிகவும் பிரகாசமாக எரியத்தொடங்கும். ஒளி அடிமை என்று அதை அழைத்தார்கள்.


மு.கோபி

Comments