முதல் உயிரி காப்புரிமை
போ ன் கண்டுபிடிப்பு, லைட் கண்டுபிடிப்பு, ஸ்டாப்லர் பின் கண்டுபிடிப்பு என்று ஏராளமான பொருட்களுக்கு காப்புரிமை வாங்கி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உயிரினங்களுக்கு காப்புரிமை வாங்கி கேள்விப்பட்டிருக்கிறோமா? கடந்த 20 ஆண்டுகளாக ஏராளமான மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களுக்கு காப்புரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு வித்திட்டவர், நுண்ணுயிரி விஞ்ஞானியான ஆனந்த மோகன் சக்ரவர்த்தி.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். 1965ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், நுண்ணுயிரியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், தொழில் நிமித்தமாக அமெரிக்கா சென்று, ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். இவர்தான், மரபணு மாற்ற ஆராய்ச்சித் துறை வளர வழிவகை செய்த முன்னோடி. இவர், 1960களில் சூடோமோனஸ் என்ற வகை பாக்டீரியாக்களை வைத்து ஆய்வு செய்தார். அதில், 4 வகை பாக்டீரியாக்கள் எண்ணெயை உணவாக உட்கொள்பவை.
கடல், நிலம் போன்ற இடங்களில் அதிகமான எண்ணெய் கீழே சிந்திவிட்டால், அவற்றைச் சுத்தம் செய்வது லேசான காரியம் அல்ல. சமீபத்தில்கூட, எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளாகி, கடலே எண்ணெய்க் கோலமாய் மாறியது நமக்கு நினைவிருக்கலாம். இச்சூழலில், சிந்திய எண்ணெய்ப் பொருளை, அதை உணவாக உட்கொள்ளும் பாக்டீரியாக்களை வைத்து வேலை வாங்கினால் என்ன என்று சக்ரவர்த்தி சிந்தித்தார்.
எண்ணெய்ச் சட்டிக்குள் பாக்டீரியாக்கள்
சூடோமோனஸ் என்ற பாக்டீரியா இனத்தைச் சேர்ந்த நான்கு வகை பாக்டீரியாக்கள், எண்ணெய்ப் பொருளை உணவாக உட்கொள்பவை. சோதனைக்கூடத்தில், அவற்றை எண்ணெய் ஜாடிக்குள் எடுத்து விட்டார் சக்ரவர்த்தி. ஆனால், அந்த எண்ணெய் தின்னி பாக்டீரியாக்கள், ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டன. புரியும்படி சொல்வதென்றால், ஓர் உணவுத் தட்டு இருக்கிறது. அதில் உள்ள கோழி, குமாருக்குப் பிடிக்கும். மீன், நந்தினிக்குப் பிடிக்கும். ஆட்டுக்கறி, கோபாலுக்குப் பிடிக்கும். அப்பளம் ராஜனுக்குப் பிடிக்கும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது, பசியாய் உள்ள நான்கு பேரின் முன்னால் அந்தத் தட்டை வைத்தால், அதை எடுத்து உண்பதில் போட்டி ஏற்படுவது இயல்புதானே. அப்படித்தான், எண்ணெயில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறையும், ஒவ்வொரு வகை பாக்டீரியா சாப்பிடும் என்ற நிலையில், அவற்றுக்குள் போட்டி ஏற்பட்டது. இதனால், எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்து உண்பதில் வேகமோ, வீரியமோ இல்லை. எண்ணெயும் ஒழுங்காகச் சுத்தமாகவில்லை.
ஐக்கியமான பிளாஸ்மிட்கள்
அய்யய்யோ என்று அதற்குக் கவலைப்படாமல், சக்ரவர்த்தி விஞ்ஞான மூளையை பயன்படுத்தினார். பாக்டீரியாக்களில் உள்ள புரதம்தான், அவற்றின் உணவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. தமக்குச் சுரக்கும் புரதத்தை பொறுத்துத்தான், சர்க்கரையையோ, மீத்தேனையோ, கந்தகத்தையோ அல்லது மற்றவற்றையோ பாக்டீரியாக்கள் உண்ணும். இன்ன புரதம்தான் உற்பத்தியாக வேண்டும் என்று கட்டளையிடுவது பிளாஸ்மிட்கள். (பிளாஸ்மிட் என்றால், டி.என்.ஏ. வளையங்கள்). சரி, இந்த நான்கு வகையான பாக்டீரியாக்களில் உள்ள தனித்தனி பிளாஸ்மிட்டுகளை எடுத்து, ஒரே பாக்டீரியாவில் பொருத்திவிட்டால் என்ன என்று யோசித்தார் விஞ்ஞானி சக்ரவர்த்தி. இதையடுத்து, அவற்றைத் தனித்தனியே பிரித்தெடுத்து, புறஊதாக்கதிர்களைச் செலுத்தி, ஒரே பிளாஸ்மிட்டாக சக்ரவர்த்தி மாற்றினார். பின்னர், அந்த ஒற்றை பிளாஸ்மிட்டை, பாக்டீரியா ஒன்றில் அவர் செலுத்தினார். இப்போது உருவான பாக்டீரியாவுக்கு multiplasmid hydrocarbon -degrading Pseudomonas என்று பெயரிடப்பட்டது.
கெட்டிக்கார பாக்டீரியா
இந்தப் புதுவகை பாக்டீரியாவை, எண்ணெய்ச் சிதறலில் தூக்கிப் போட்டு சோதித்துப் பார்த்தார் சக்ரவர்த்தி. என்ன பிரமாதம்! முன்சொன்ன நான்கு வகை பாக்டீரியாக்களைவிட, இரண்டு மடங்கு வேகமாக எண்ணெயைக் காலி செய்தது. சக்ரவர்த்தி குழுவினரின் முயற்சி திருவினையானது.
அடுத்து, தனது கண்டுபிடிப்பைப் பாதுகாக்க வேண்டுமே... நேரே காப்புரிமை அலுவலத்துக்குச் சென்று, ‘எனக்கு மரபணு மாற்றப்பட்ட சூடோமோனஸ் பாக்டீரியாவுக்கு காப்புரிமை கொடுங்கள்’ என்று மனு கொடுத்தார் சக்ரவர்த்தி. காப்புரிமை அலுவலக அதிகாரிகள் அதிர்ந்து போயினர். ‘என்னது, உயிரினத்துக்குக் காப்புரிமையா?’ என்று அவர்கள் பொங்கினர். சக்ரவர்த்தியின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு 1971ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. அங்கும், அரசு தரப்பு வழக்குரைஞர் சக்ரவர்த்தியின் கோரிக்கைக்கு கடுமையான ஆட்சேபனை கூறினார்.
நல்ல தீர்ப்பு
அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தின்படி, உயிரினத்துக்குக் காப்புரிமை கொடுக்கவே முடியாது என எதிர்தரப்பு வக்கீல் சாதித்தார். அப்படிக் கொடுப்பது, மனித குலத்துக்கு எதிரான செயல் என்று ஆவேசப்பட்டார். ஆனால், சக்ரவர்த்தி தரப்பினர் அசைந்து கொடுக்கவில்லை. எல்லா உயிரினங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு உயிருள்ளவையுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும், அதற்கும் காப்புரிமை வழங்க வேண்டும்; இந்தப் புதிய வகை பாக்டீரியா மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது. எனவே காப்புரிமைப் பட்டியலுக்குள் தனது கண்டுபிடிப்பு வரும் என்று அவர் கூறினார். ஒன்பது ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தின் முடிவில், சக்ரவர்த்தி தன் கோரிக்கையில் வெற்றி பெற்றார். 1981ல், சக்ரவர்த்திக்கு, மரபணு மாற்றப்பட்ட சூடோமோனஸ் பாக்டீரியத்துக்கான காப்புரிமை வழங்கப்பட்டது. உலக அறிவியல் வரலாற்றில், முக்கியப் படிக்கல்லாக அந்தத் தீர்ப்பு அமைந்தது.
இதையடுத்து, மரபணு மாற்ற ஆராய்ச்சிகள் வேகமெடுத்தன. உயிரின உருவாக்கத்துக்கும் காப்புரிமை கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டதால், பலரும் இத்துறையில் முதலீடுகளைச் செய்தனர். மரபணு மாற்ற ஆராய்ச்சித் துறை, பெரிய அளவில் மாறியது. அதன் காரணமாக, விவசாயத்திலும், உணவு உற்பத்தியிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
– சிவசக்தி
Comments
Post a Comment