பார்வை சோதனைக்கு டயாப்டர் முறை


கண் பரிசோதனைக்காக நாம் செல்லும்போது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு சார்ட்டை காட்டி படிக்கச் சொல்வார்கள். சிறியவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் என எல்லாத் தரப்பினர் கண் பிரச்னைகளையும் கண்டறிந்து சரிசெய்ய அந்த சார்ட் உதவுகிறது. சுவரில் மாட்டப்பட்டிருக்கும் அந்த சார்ட் எப்படி வந்தது? அதைக் கண்டுபிடித்தவர் பற்றி என்றாவது சிந்தித்துள்ளோமா?

கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் சார்ட்டை உருவாக்கியவர் ஃபெர்டினாண்ட் மோனோயெர் (Ferdinand Monoyer). பிரான்ஸில் 1836ம் ஆண்டு பிறந்த இவருக்கு ஐந்து வயதாகும் போது, குடும்பத்தைவிட்டு தந்தை பிரிந்து சென்றுவிட்டார். அவருடைய தாய், கண் மருத்துவரான விக்டர் ஸ்டியோபெர் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

வளர்ப்புத் தந்தையின் வழிகாட்டல்

தனது சிறிய தந்தையைப் போலவே தானும் ஒரு கண் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை, ஃபெர்டினாண்ட் மோனோயெருக்கு வந்தது. விக்டர் செய்யும் கண் பரிசோதனைகளை எல்லாம், கூடவே இருந்து கவனித்து வந்தார்.

விக்டரும், சிறுவனான ஃபெர்டினாண்ட்மோனோயெர் கேட்ட சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் தந்து ஆர்வமூட்டினார். இதனால், சிறிய தந்தையின் தொழிலையே தேர்வுசெய்ய முடிவெடுத்து, கண் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில், மோனோயெர் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். அவருடைய நீண்ட நெடிய சிந்தனை மற்றும் உழைப்பால் உருவானதுதான், ‘டயாப்டர்’ (Dioptre) என்ற கண் பரிசோதனை முறை.

டயாப்டர் முறை

தொலைவிற்கும், சோதிக்கப்படுபவரின் பார்வைக்கும் விகிதம் ஏற்படுத்தி கண்குறைபாட்டைக் கண்டறிவதுதான் டயாப்டர். இதற்காக, மோனோயெர் ஒரு சார்ட்டை உருவாக்கினார். அதில், எழுத்துகளை சிறியதில் இருந்து பெரியது வரை எழுதி வைத்தார். நடுநடுவே சில எண்களையும் சேர்த்தார். அப்படி கண்பரிசோதனைக்காக நுணுக்கமாக உருவாக்கிய அந்த முறையைத் தான் இன்றுவரை நாம் பயன்படுத்திக் வருகிறோம்.

தன் பெயரான ‘மோனோயெர்’ என்பதன் எழுத்துகளை வைத்தே சார்ட்டை உருவாக்கினார். இவருடைய அட்டவணையில், எழுத்துகள் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும். எழுத்துகள் மேலே செல்லச் செல்ல, எழுத்துகளின் அளவு பெரியதிலிருந்து சிறியதாகக் குறைந்து கொண்டேயிருக்கும்.

அந்தச் சார்ட்டின் இடது புறத்தில் இருக்கும் முதல் எழுத்துகளைச் சேர்த்தால் மோனோயெர் என்ற சொல் வரும். கண் பரிசோதனை மேற்கொள்ளும் நபர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணால் இவற்றைப் படிக்க வேண்டும். நபரிடம் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இந்த வரைபடம் மாட்டப்பட்டிருக்கும். கடைசி வரியில் இருக்கும் எழுத்தைப் படிக்கும் ஒருவருக்கு, கண் பார்வை சரியாக உள்ளது என்பது புலனாகும்.

சில மாற்றங்கள்

மோனோயெருக்குப் பிறகு அந்தச் சார்ட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 1862ம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ஹெர்மன் ஸ்னெல்லன் என்பவர், எழுத்துகளுடன் குறியீடுகளையும் சேர்த்தார். இவரது பெயராலேயே கண்ணின் பார்வைத் திறனை அளக்கப் பயன்படும் சார்ட், ஸ்னெல்லன் அட்டவணை (Snellan chart) என்றழைக்கப்படுகிறது. இவருடைய வரைபடம், பரிசோதிக்கப்படும் நபரிடமிருந்து 20 அடி தொலைவில் மாட்டப்பட்டிருக்கும்.

இறங்குமுகமாக பதினோரு வரிகளில் எழுத்துகள் அச்சிடப்பட்டிருக்கும். முதல் வரியில் ஓர் எழுத்துடன் ஆரம்பிக்கும் அட்டவணையில், அடுத்தடுத்த வரிகளில் எழுத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கும். எழுத்துகள் அதிகரிக்க அதிகரிக்க, எழுத்தின் அளவு குறைந்துகொண்டே செல்லும். இந்த அட்டவணையில், பெரும்பாலும் எழுத்துகள் ஆங்கில எழுத்துகளாக இருந்தாலும், தமிழிலும், பிற மொழிகளிலும், இந்த வரைபடம் பயன்படுத்தப்படுகிறது.

Comments