ஃப்ரிட்ஜ் உருவான கதை
இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற மனிதனின் எண்ணம்தான் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்பதனப் பெட்டியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது. முதலில் 1750களில் ரெஃப்ரிஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ்கட்டி உருவாக்கும் இயந்திரம் முதலில் 1854ல் உருவாக்கப்பட்டது.
17ம் நூற்றாண்டு வரை, இயற்கையான முறைகளைக் கையாண்டுதான் பொருட்களை குளிர்ச்சிப்படுத்தினார்கள். இதற்காக, இயற்கையாகக் கிடைக்கும் பனிக்கட்டி, ஈர மணல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், 18ம் நூற்றாண்டில் மைக்கேல் பாரடேவின் விதிப்படி, அமோனியாவும், இதர சில வாயுக்களும் உயர் அழுத்தத்தில் வெப்பத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஃப்ரிட்ஜின் கண்டுபிடிப்பு வேகமெடுத்தது. 1834ல், பிரிட்டனைச் சேர்ந்த ஜாக்கப் பெர்கின்ஸ் என்பவர், பாரடேவின் விதியின் அடிப்படையில் ஐஸ் தயாரிக்கும் பெட்டியை உருவாக்கினார். 1856ல், ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் என்ற பத்திரிகையாளர் தான், நடைமுறை சாத்தியமுள்ள ஐஸ் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். 1913 வரை இந்தச் சோதனை ஐஸ் தயாரிக்கும் முயற்சியாகத்தான் இருந்தது.
1913ம் ஆண்டு முதன்முதலில் மக்கள் உபயோகப்படுத்தும் ஃப்ரிட்ஜ் என்ற அமைப்பை, அமெரிக்காவைச் சேர்ந்த பிரடெரிக் வோல்ஃப் உருவாக்கினார். உணவுப் பொருட்கள், மாமிசம் ஆகியவை கெடாமல் இருக்கவும், ஐஸ்கட்டி தயாரிக்கவும் உதவியாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. 1914ல், அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் நாதனியல் வேல்ஸ், மின்சாரத்தில் இயங்கும் வீட்டு ஃபிரிட்ஜுக்கான முயற்சியைத் தொடங்கினார். இதுவே, புகழ்பெற்ற கெல்வினேட்டர் கம்பெனி உருவாகக் காரணமாக இருந்தது. 1940களில், வீட்டு உபயோக ஃபிரிட்ஜ்கள், அதன் வடிவம், அமைப்பு, திறன் ஆகியவற்றில் பெரும் மாற்றத்தைக் கண்டன. மேலே மட்டும் ஐஸ்கட்டி உருவாக்கும் ஃப்ரீசரும், கீழ்பகுதியில் மிதமான குளிர்நிலையை தக்கவைக்கும் பெட்டியும் கொண்டு, ஃப்ரிட்ஜ்கள் உருவாக்கப்பட்டன. வீடுகள் தவிர, தொழிற்சாலைகளில், பிரம்மாண்ட ஃப்ரிட்ஜ் அமைப்புகளைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கின்றனர். மனிதர்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத கண்டுபிடிப்பாக ஃபிரிட்ஜ் மாறியுள்ளது.
– மலர்
Comments
Post a Comment