விளையாட்டில் பிறந்த ‘போஸ்ட் இட் நோட்ஸ் ’



`போஸ்ட் இட்’ (Post it Notes)என்று அழைக்கப்படும், குறிப்பெழுதி ஒட்டும் வண்ணத்தாள்களை விரும்பாதவர்கள் நம்மில் யாரும் இருக்கமாட்டார்கள். நமக்கு தேவையான குறிப்புகளை எழுதி, சுவர், ஃபிரிட்ஜ், கண்ணாடி என்று எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம். ஒட்டுவது என்றால் ஒரேடியாக இல்லை, தற்காலிகமாக!. ஒட்டப்படும் பொருளில் பசையின் பிசுபிசுப்பு ஏற்படாது. பலரும் விரும்பும் இந்த குறிப்புத் தாள்கள், விசித்திர விளையாட்டால் உருவானது.

'3M' கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, இன்று உலகெங்கும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த நிறுவனம், புதுவித பசையைக் கண்டறியும் முயற்சியில் இருந்தது. 1968ல், ஸ்பென்ஸ் சில்வர் என்ற வேதியியல் அறிஞர் அதற்கான ஆய்வைச் செய்துகொண்டிருந்தார். அவர் உருவாக்க விரும்பியது, கடுமையான பசை. விளையாட்டுக்காரரான அவர், கன்னாபின்னாவென்று வேதிப்பொருட்களைக் கலந்து, என்ன நடக்கிறது என்று சோதித்துப் பார்ப்பார். அப்படியொரு நாள் செய்துகொண்டிருந்தபோது புதுவிதப் பசை கிடைத்தது.

அந்தப் பசையைக் கொண்டு ஒரே ஒருமுறைதான் ஒட்ட முடிந்தது. பிய்த்துவிட்டு, மறுபடி ஒட்டினால் ஒட்டவில்லை. அவர் உருவாக்க விரும்பியதோ, நிரந்தரமாக ஒட்டும் பசை. ஸ்பென்ஸ் சில்வரின் நிறுவனத்தில் யாரும் அந்தப் பசையைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவர் மனம் தளரவில்லை. இந்தப் பசையும் ஏதாவது ஒருவிதத்தில் உதவும் என்று நம்பினார். மேலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

1974-ல் , சில்வருடன் பணியாற்றும் ஆர்ட் ஃபிரை என்பவர் சர்ச்சுக்குச் சென்றார். அங்கே அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த பாடல் புத்தகத்தின் `புக்மார்க்’ அடிக்கடி கீழே விழுந்துகொண்டிருந்தது. அதனால் ஆர்ட் ஃபிரை, பாடல் வரிகளைத் தவறவிட நேர்ந்தது. கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், அவருக்குள் ஒரு பொறி தட்டியது. சில்வர் கண்டுபிடித்த தற்காலிகப் பசை இருந்தால் `புக்மார்க்’ போன்றவற்றைத் தேவையானபோது ஒட்டி, தேவையில்லாதபோது எடுத்துவிடலாமே! இந்த யோசனையை சில்வரிடம் சொல்ல, அவருக்கும் பிடித்துப்போனது.

உடனே, ஆய்வகத்தில் தேவையற்றுக் கிடந்த மஞ்சள் காகிதங்களை, சதுர வடிவில் வெட்டி குறிப்புத்தாள்களை உருவாக்கியது 3M நிறுவனம். 1977ல் அமெரிக்காவில் போஸ்ட் இட் நோட்ஸ் (Post it Notes ) விற்பனைக்கு வந்தது. ஆனால், யாருமே அதை சீண்டவில்லை. இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு இலவச சாம்பிள்களை 3M நிறுவனம் வினியோகித்தது. இரண்டே வருடங்கள்தான், விற்பனை விண்ணைத் தொட்டது. மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலும் போஸ்ட் இட் நோட்ஸ் விற்பனை தொடங்கப்பட்டது. இன்று கோடிக்கணக்கானோர் தங்கள் வீடுகளில், அலுவலகங்களில் `போஸ்ட் இட்’ நோட்ஸ் பயன்படுத்துகின்றனர். வண்ண சிலிப்பில் எழுதி, இன்னொரு காகிதத்தின் மீதோ, போனுக்கு அருகிலோ, பிரிட்ஜ் மேலோ, கதவிலோ ஒட்டிவிடலாம். பசையைத் தேட வேண்டியதில்லை.

சிவசக்தி

Comments