ரத்த தானமும், ரத்த வங்கியும் எப்படி உருவானது?
விபத்து அல்லது நோய் காரணமாக ரத்தம் தேவையுள்ளவர்களுக்கு, ரத்தம் ஏற்றிக் காப்பாற்றுவது இன்று எளிமையான ஒன்று. ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன் அப்படியல்ல. பல தோல்விகளும், தடைகளும் ஏற்பட்டன. ரத்தம் ஏற்ற வேண்டுமென்றால் ரத்தத்தைச் சேமிக்க வேண்டும். ஆனால், உடலிலிருந்து வெளியேற்றப்படும் ரத்தம் உடனே உறைந்து விடும். 1914-ல் தான் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயனப் பொருளை ரத்தத்தில் சேர்ப்பதன் மூலம், அதன் உறைவைத் தடுக்க முடியும் என்று கண்டுபிடித்தனர். மறுபுறம், நீண்ட காலத்துக்கு ரத்தத்தைச் சேமித்து வைக்க முடியாது. இதனால், ரத்தத்தில் மிதக்கும் செல்கள் சீக்கிரத்தில் இறந்தன. 1932ல் தான், குளிரூட்டும் பெட்டியில் ரத்தத்தைப் பாதுகாத்தால், அந்த செல்களை அழியாமல் காக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அதன் பிறகு ரத்தச் சேமிப்பு நிலையங்கள் அமைத்து, மக்களிடம் இருந்து ரத்த தானம் பெறும் வழக்கம் பரவலானது
ரத்த தானம் காலவரிசை வரலாறு :
1616: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் வில்லியம் ஹார்வி, இதயத்தில் ஆரம்பித்து மூளை உட்பட உடலின் பல பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்ற புதிய தகவலை வெளியிட்டார்.
1665: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் லோவர், ஒரு நாயிடமிருந்து இன்னொரு நாய்க்கு வெற்றிகரமாக ரத்தம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து, விலங்குகளின் ரத்தத்தை மனிதர்களுக்கு ஏற்ற முயன்று, பல நோயாளிகளும் உயிரிழந்தனர்
1678: கிறிஸ்தவ தலைமை குருவான போப், ரத்தம் ஏற்றுவது தவறு என்று அறிவித்தார்.
1818: இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஜேம்ஸ் பிளண்டல், மனிதர்களின் ரத்தத்தை மட்டுமே மனிதர்களுக்கு ஏற்ற முடியும் என்று வாதிட்டார்.
1901: ஆஸ்த்ரியா நாட்டு மருத்துவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர், A, B, O ரத்த வகைகளைக் கண்டறிந்தார்.
1914: பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்டின், சேமிக்கப்பட்ட ரத்தம் உறையாமல் இருக்க, சோடியம் சிட்ரேட் கரைசலை பயன்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறிந்தார்.
1930: ரத்த வகைகள் கண்டுபிடிப்புக்காக, மருத்துவர் கார்ல் லாண்ட்ஸ்டீனருக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1932: ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே பக்தாசாரவ், தானம் செய்யப்பட்ட ரத்தத்தை, 21 நாட்கள் குளிரூட்டி பாதுகாக்கும் வழியை கண்டறிந்தார்.
1936: கனடா நாட்டைச் சேர்ந்த மருத்துவர் நார்மல் பெத்தூன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர் காலகட்டத்தில், முதல் ரத்த சேமிப்பு வங்கியை நிறுவினார்.
1942: இந்தியாவில் முதன் முதலில் கல்கத்தா நகரில் ரத்த சேமிப்பு வங்கி நிறுவப்பட்டது.
1998: இந்திய உச்ச நீதிமன்றம், ரத்தத்தின் வணிக ரீதியான விற்பனைக்குத் தடை விதித்தது.
– சிவசக்தி
Comments
Post a Comment