வெடித்து சிதறிய உலகின் முதல் டிராஃபிக் சிக்னல்
1868ம் ஆண்டு, லண்டன் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே வைக்கப்பட்டதுதான், உலகின் முதல் டிராஃபிக் விளக்காகக் கருதப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் ஆட்டோமொபைல் வாகனங்கள் இல்லை. எனினும், குதிரை சாரட்டு வண்டிகளின் பெருக்கத்தால், ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்தன. இதையடுத்து, லண்டன் நாடாளுமன்ற சாலையில், எரிவாயு மூலம், மனித உழைப்பால் இயக்கப்படும் போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டது. 1869ல், துரதிருர்ஷ்டவசமாக அந்த விளக்கில் இருந்து எரிவாயு கசிந்து, வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதனால், சிக்னலைக் கண்டு மக்கள் வெகுவாகப் பயந்தனர். இதையடுத்து, லண்டனில் எரிவாயு சிக்னல் முறை ஒழித்துக் கட்டப்பட்டது.
அந்தச் சம்பவம் நடந்து 45 ஆண்டுகளுக்குப் பின்னர், வெற்றிகரமாக அமெரிக்காவில் மின்சாரத்தில் இயங்கும் டிராஃபிக் விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆட்டோமொபைல் வாகனங்களின் வருகைக்குப் பிறகு, அமெரிக்காவின் சாலைகள் குழப்படி மிக்கதாக ஆயின. குதிரை சாரட்டு வண்டிகள், மிதிவண்டிகள் போன்றவை பயணிக்கும் சாலையிலேயே மோட்டார் வாகனங்களும் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நாளுக்கு நாள் குழப்பம் அதிகமானதால், சாலை விதிகளை மாற்றியமைத்து ஒழுங்குக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம் உருவானது. இதையடுத்து, சாலைப் போக்குவரத்தைச் சரிப்படுத்த, பல்வேறு ஒழுங்கு முயற்சிகள் நடந்தன. 1912ல், சால்ட் லேக் சிட்டியில், லெஸ்டர் என்ற துப்பறியும் நிபுணர், மரப்பெட்டிகளை சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களை பூசி கம்பத்தில் மாட்டினார்.
எனினும், போக்குவரத்துக்கான மின்சார சிக்னலை முதலில் வடிவமைத்தவராக, ஜேம்ஸ் ஹோக் கருதப்படுகிறார். 1914ம் ஆண்டு, அவர் வடிவமைத்த சிக்னலில், பச்சை மற்றும் சிவப்பு நிற விளக்குகள் மட்டுமே இருந்தன. நான்கு சாலை சந்திக்கும் இடத்தின் மையத்தில், அந்த சிக்னலை அவர் பொருத்தினார். நான்கு பக்கங்களிலும் பச்சை மற்றும் சிவப்பு விளக்குகள் இருந்தன. கட்டுப்பாட்டு மையத்துடன் விளக்குகளின் வயர்கள் இணைக்கப்பட்டிருந்தன. சாலைப் போக்குவரத்து ஊழியர், அதை கையால் இயக்க வேண்டும். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் பச்சை விளக்கை எரியவிட முடியாது; அதற்கேற்ற வகையில் சிக்னல் வடிவமைக்கப்பட்டிருந்தது. வெகுவிரைவிலேயே அமெரிக்கா முழுவதும் இந்த சிக்னல் முறை செயற்படுத்தப்பட்டது. 1920ல், வில்லியம் பாட்ஸ் என்பவர் வடிவமைத்த சிக்னலில், மஞ்சள் விளக்கும் சேர்க்கப்பட்டது. திடீரென்று நிகழும் சிக்னல் மாற்றத்தால், வாகன ஓட்டிகள் தடுமாறமால் இருக்க, மஞ்சள் விளக்கு உதவியது.
↔– சிவசக்தி
டிராஃபிக் விளக்குகளின் பரிணாமம்
1869: எரிவாயுவில் இயங்கும் டிராஃபிக் விளக்கு வெடித்து விபத்துக்குள்ளாகியது.
1912: சால்ட் லேக் சிட்டியின் துப்பறியும் நிபணர், லெஸ்டர் வயரின், மரப்பெட்டியில் சிகப்பு மற்றும் பச்சை வண்ணங்களைத் தடவி சிக்னலை உருவாக்கினார்.
1920: டிராஃபிக் சிக்னல் மாறப் போவதை வாகன ஓட்டிகளுக்கு முன்னரே அறிவிக்கும் எச்சரிக்கை ஒலிகள் பொருந்திய சிக்னல்கள் அறிமுகமாயின.
1923: கேரட் மார்கன் கறுப்பின அமெரிக்கர், இன்று பரவலாகப் புழக்கத்தில், 'T' வடிவ டிராஃபிக் கம்பத்தை வடிவமைத்தார்.
1947: ஜான் ஆலன் என்ற அமெரிக்கர், பாதசாரிகளுக்கான டிராஃபிக் விளக்கை வடிவமைத்தார்.
1990: டிராஃபிக் விளக்கில், கணக்கீட்டு டைமர்கள் (countdown timers)அறிமுகப்படுத்தப் பட்டது.
Comments
Post a Comment