அவசரமாய் அழைத்தால் வரும் ஆம்புலன்ஸ்



உயிர்காக்கும் பணியில் இடைவிடாமல் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒன்று உண்டு என்றால், அது ஆம்புலன்ஸ். எத்தனை போக்குவரத்து நெரிசல் இருந்தாலும், எத்தகைய நள்ளிரவு நேரமாக இருந்தாலும் சரி, நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் ஆம்புலன்ஸ் எப்போதும் கடமை தவறுவதில்லை. இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு தெரியுமா?

முதலில், ஆம்புலன்ஸுகள் குதிரை இழுக்கும் வண்டிகளாகத்தான் இருந்தன. போர்க்களம் என்றாலே வீரர்கள் காயமடைவது சகஜம்தான். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்வதென்றால், போர்க்களத்துக்கே சென்று உதவ வேண்டியிருந்தது. அவர்களை மருத்துவக் கூடாரங்களுக்குத் தூக்கிச் செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது.

மேலும், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கூட்டிச் செல்வதற்குள், பல போர் வீரர்கள் உயிரிழக்கும் நிலையும் இருந்தது. இதைக் கவனித்த, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டொமினிக் ஜீன் லாரி (Dominique Jean Larrey) என்ற அறுவைச் சிகிச்சை நிபுணர், 1793ல் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தினார். இவர், படைத்தளபதி நெப்போலியனிடம் தலைமை மருத்துவராகப் பணியாற்றினார்.

ஆரம்ப காலகட்டங்களில், குதிரை இழுவை வண்டியே ஆம்புலன்ஸாகப் பயன்பட்டது. இதில், போர் வீரர்களை ஸ்ட்ரெச்சரில் வைத்துஏற்றி வரும் வசதியை டொமினிக் லாரி அறிமுகம் செய்தார். மேலும், ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்களும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதனால், குதிரை வண்டியில் வைத்தே, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய முடிந்தது.

பிரெஞ்சு மொழியில், `ஆம்புலேர்’ (Ambulare) என்ற சொல்லுக்கு, ‘நடப்பது’ என்பது அர்ததமாகும். உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம் ஆம்புலன்ஸ் என்று வழங்கப்பட்டது. அதன் காரணமாக, போர்வீரர்களை நகர்த்திச் செல்லும் குதிரை வண்டிகளும் `ஆம்புலன்ஸ்’ என்று அழைக்கப்பட்டன.

முதலில் போர் வீரர்களுக்கு மட்டும் உதவி வந்த ஆம்புலன்ஸ், பின்னர் பொதுமக்களுக்காகவும் விரிவடைந்தது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என்று பல நாடுகளிலும் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

1966ல் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான வடிவமைப்பு முறைகளும், தேவைகள் குறித்தும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆம்புலன்ஸில் கட்டாயமாக இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் குறித்தும், மருத்துவ உதவியாளர் அறிந்து வைத்திருக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்தும் அதில் வழிகாட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, நோயாளிகளைச் சிரமப்படுத்தும் விதமாக தாழ்வாக ஆம்புலன்ஸ் இல்லாமல், ஆம்புலன்ஸ் வாகனத்தின் கூடு, உயரமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இன்று ஆம்புலன்ஸுகள் ஒரு குட்டி மருத்துவமனையாகவே இயங்கும் அளவுக்கு, அதில் ஏராளமான மருத்துவ வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும், விமான ஆம்புலன்ஸுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு நகர்ப்புறங்களில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணம். எனினும், உயிர்காக்கும் பணியில் தரைவழி ஆம்புலன்ஸுகளின் முக்கியத்துவத்தை எதனாலும் ஈடுகட்ட முடியாது என்பதே எதார்த்தம்.




↔– சிவசக்தி

Comments