காற்றடிக்கும் டயர்கள் : டன்லப் உருவாக்கிய சாலை புரட்சி


கடந்த 1887ல், ஸ்காட்லாந்து நாட்டின் ஏர்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான ஜானிக்கு, அவனது தந்தை டன்லப், பிறந்த நாள் பரிசாக மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக்கொடுத்தார்,  அந்த காலத்தில், சைக்கிள் சக்கரங்கள் கெட்டியான ரப்பரால் உருவாக்கப்பட்டிருந்தன. நம்முடைய மொழியில் சொல்வதாக, கட்டை டயர்கள். கரடு முரடான சாலையில் ஓட்ட முடியாமல் திணறினான் ஜானி. சைக்கிள் தன்னை தூக்கிப்போடுவதாக ஜானி தந்தை டன்லப்பிடம் புகார் கூறினான்.
ஜானியின் தந்தை, அப்பகுதியில் பிரபலமான கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர். அவர், குதிரைகள் கெட்டியான ரப்பர் கழுத்துப் பட்டை அணிந்து, கடும் சுமை இழுக்கும்போது கஷ்டப்படுவதை பார்த்து கவலையடைந்திருந்தார். அந்த கஷ்டத்தை குறைக்க காற்று அடைக்கப்பட்ட குஷன்களை கழுத்துப் பட்டையாக பயன்படுத்துவது குறித்து அவர் சோதனையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், மகன் சைக்கிள் ஓட்டுவதை கண்ட டன்லப், தனது ஆராய்ச்சியை அதை நோக்கி திருப்பினார். எப்போதும், ஏதேனும் நெருக்கடி அல்லது தேவையிலிருந்தே கண்டுபிடிப்புகள் உருவாகின்றன எனும் விதிக்கேற்ப, ஜானியின் நெருக்கடி உலகின் முக்கிய கண்டுபிடிப்புக்கு காரணமாய் அமைந்தது.
டன்லப் தன் அறுவை சிகிச்சை கூடத்துக்கு சென்றபோது, அங்கு ரப்பர் ஷீட்டுகள் இருப்பதை கண்டார். அறுவை சிகிச்சை செய்யும்போது, மேசை மேல் கத்தி, ரத்தம் போன்றவை படாமல் பாதுகாக்க வைத்திருந்த ரப்பர் விரிப்புகள் அவை. அந்த ரப்பர் ஷீட்டுகளை,  தன்னுடைய அறுவை சிகிச்சை திறமையை கொண்டு,  நீள்வாக்கில் கிழித்து, டியூப் போன்று இறுக தைத்தார். காற்று வெளியேறாதபடி, தையல் ஓரத்தை பசை போட்டு ஒட்டினார்.
பின்னர், அந்த டியூப்பை, சைக்கிள் சக்கரத்துடன் வைத்து, கேன்வாஸ் துணியால் சுற்றினார். ஆனால், கேன்வாஸ் துணி ரப்பர் டியூப்பை பாதுகாக்க போதுமானதாய் இல்லை. இதனால், கேன்வாஸ் துணி மீது ரப்பர்  பெயின்டை மேல்பூச்சாக பூசினார். பின்னர் டியூப்பில் காற்றை அடித்தார். இப்போது, சைக்கிளும் அவர் மகன் கேட்டபடியே எளிதாகச் சாலையில் உருண்டோடியது; அவனை சைக்கிளும் தூக்கிப்போடவில்லை. பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வந்த ஜானி, சைக்கிள் பந்தயத்தில் தனது நண்பர்களை இலகுவாக தோற்கடித்துவிட்டதாக கூறி பெருமைப்பட்டான். இப்படித்தான்,  காற்றடைக்கப்பட்ட டயர் (Pneumatic Tyres) உருவானது.
பின்னர் 1889ல் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில், டன்லப் உருவாக்கிய காற்றடைக்கப்பட்ட சக்கரம் கொண்ட மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றார். பல இடங்களிலும் இதே சம்பவங்கள் நடைபெற்றன. இதைப்பற்றி அறிந்த கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபர், டன்லப்பின் டயர் மீது ஆர்வம் கொண்டார். டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது. விரைவிலேயே பழைய டயர்கள் வழக்கொழிந்து, காற்று அடைக்கப்பட்ட டயர்கள்  விரைவாக பிரபலமடைந்தன. பின்னர், மோட்டார் வாகனத்தின் வருகையால் காற்றடைக்கப்பட்ட டயர்களின் (Pneumatic Tyres) தேவை அதிகமானது. 1900க்கு பிறகு, சைக்கிள்களுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் காற்றடிக்கப்பட்ட டயரின் தேவை அதிகரித்து கொண்டே போனது. டன்லப்பின் கண்டுபிடிப்பு பல தொழிற்சாலைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நவீன ரப்பர் டயர்களின் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற ஜான் பாய்ட் டன்லப், 1921-ல் தனது 81-வது வயதில் காலமானார்.
மு.கோபி

Comments