பிரெய்லி : பார்வையற்றோருக்கு புது பார்வை



கண்களால் மட்டுமல்ல கை விரல்களாலும் படிக்க முடியும் என்று தனது கண்டுபிடிப்பு மூலம் நிரூபித்தவர் ‘லூயிஸ் பிரெய்ல் ’ (Louis Braille ). புடைத்து நிற்கும் புள்ளிகளாக எழுத்துகளை மாற்றி, அதை கண் பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்து படிக்கும் முறையை கண்டுபிடித்தவர் பிரெய்ல்.

லூயிஸ் பிரெய்ல் 1809ல் பிரான்ஸ் நாட்டின் குப்ரே என்ற குக்கிராமத்தில் பிறந்தார்.  இவருடைய அப்பா சைமன் ரேலே , குதிரை லாடம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். லூயிஸ் பிரெயில், மூன்று வயதாக இருக்கும்போது, பட்டறையில் இருந்த ஒரு தையல் ஊசி மற்றும் கத்தியை வைத்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக, சிறுவனது கண்ணில் காயம் ஏற்பட்டது; உள்ளூர் மருத்துவம் செய்த அவனது பெற்றோர், விரைவில் ஆறிவிடும் என்று கருதி அலட்சியமாக விட்டுவிட்டனர். இதனால், முதலில் ஒரு கண் பார்வை, பிறகு அடுத்த கண் பார்வை என்று சீக்கிரமே கண்பார்வையற்றவரான ஆனான் பிரெய்ல்.

ஆனால், அந்த துன்பம், பின்னாளில் கண் பார்வையற்றவர்களுக்கு புதிய ஒளியை அளிக்க காரணமாக அமையப்போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. கண்பார்வையை இழந்த பிரெய்ல், சிறுவயது முதலே, அதிக அறிவாற்றல் கொண்ட சிறுவனாக திகழ்ந்தான். 10வது  வயதில், கண் பார்வையற்றோருக்கான கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார் பிரெய்ல்.

கண் பார்வையற்றவர்கள் இலகுவாக கல்வி கற்க உதவ வேண்டும் என்று பிரெய்லுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்போது, அவர் பிரெஞ்சு ராணுவம் பயன்படுத்தி வந்த ரகசிய மொழி முறை குறித்து கேள்விப்பட்டார். அதாவது, காகிதத்தில் ஆங்காங்கே உப்பி நிற்கும் 12 புள்ளிகளை (Dots) கொண்ட எழுத்து முறையை அடிப்படையாக கொண்டு ராணுவத்தினர்  தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொண்டனர். எதிரிகள் புரிந்துகொள்ள முடியாத வகையில் இருந்த இந்த எழுத்துகள், இரவு நேரத்தில் கூட தடவிப்பார்த்து படிக்கும் வகையில் இருந்தது.

‘நைட் ரைட்டிங்’ (Night Writing) என்றழைக்கப்பட்ட இந்த முறையை பிரெய் விரைவாக கற்றுக்கொண்டார். எனினும், அந்த முறை கடினமாகவும், வேகம் குறைந்ததாகவும் இருப்பதை உணர்ந்தார் பிரெய்ல். தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் இலகுவாக படிக்க வேண்டுமென்றால், அதில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து, நைட் ரைட்டிங் முறையை உருவாக்கிய சான்ஸ் பார்பியன் என்ற பிரெஞ்சு ராணுவ தளபதியை நேரில் சந்தித்தார் பிரெய்ல். செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரெய்ல் கூறியபோது, ஆச்சர்யமடைந்த சான்ஸ் பார்பியன், அதற்கு சம்மதித்தார். இதையடுத்து, எட்டடு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, ஏராளமான மாற்றங்களை புகுத்தி, 1829ல் நைட் ரைட்டிங் முறையை பிரெய்ல் எளிமையாக மாற்றினார்.

எனினும், பிரெய்ல் 42வது வயதில் உயிரிழக்கும் காலம் வரை, பிரான்ஸ் ஆட்சியாளர்கள், பிரெய்லி உருவாக்கிய முறையை அங்கீகரிக்கவோ, அதை வளர்த்துவிடவோ சம்மதிக்கவில்லை. பிரெய்லி மறைந்த பின்னரே, அவரின் உழைப்பின் அருமையை அனைவரும் உணரத்தொடங்கினர். கண் பார்வையற்றவர்கள் இலகுவாக படிக்க பிரெய்லி முறை உதவியதால், அவர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. இந்நிலையில், பிரெய்லியின் உழைப்பை அங்கீகரிக்காதது குறித்து, பிரான்ஸ் மக்கள் வேதனை அடைந்தனர். பிரெய்லியின்  பிரேதத்தை 100 வருடங்களுக்குப் பிறகு, 1952ம் மீண்டும் தோண்டியெடுத்த பிரான்ஸ் அரசு, அவருக்கு மரியாதை செலுத்தியது.


Comments