உருளை சிப்ஸ் தோன்றிய நூதன வரலாறு

சிறுவர்களுக்கு விருப்பமான நொறுக்குத்தீனிகளில் முதலிடத்தை பிடிப்பது எது என்று கேட்டால் இலகுவாக சொல்லிவிடலாம், உருளைக்கிழங்கு சிப்ஸ் என்று. அதை பின்பற்றியே நேந்திரம் சிப்ஸ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பலாக்காய் சிப்ஸ் என்று பலவகை சிப்ஸ்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி உலகையே ஈர்த்த உருளை சிப்ஸ் தோன்றிய வரலாறை கேள்விப்பட்டால், நமக்கு சிரிப்புதான் வரும்.
அமெரிக்க மாகாணமான நியூயார்க்கில் உள்ள சரடோகா ஸ்பிரிங்க்ஸ் பகுதியில் இயங்கிவந்த உயர்தர உணவகம் ஒன்றில், சமையல்கலை நிபுணராக பணிபுரிந்தவர் ஜார்ஜ் கிரம். அவருடைய சமையலுக்காகவே பலரும் அங்கு வந்துசெல்வர். தனது தனித்துவமான சமையலால், அப்பகுதி மக்களிடையே கிரம் பிரபலமாக திகழ்ந்தார் கிரம். 1853 ஆகஸ்ட் மாதம், அவர் வேலைபார்த்த உணவகத்துக்கு வந்த கார்னலியஸ் என்ற வாடிக்கையாளர் ஒருவர், கிரம்மிடம் பிரஞ்ச் ஃபிரைஸ் (French Fries) தயாரித்து தருமாறு ஆர்டர் கொடுத்தார். கிரம்மும், ரசித்து ருசித்து பிரஞ்ச் ஃபிரைஸ் உருளைக்கிழங்கை தயாரித்து கொண்டு போய் அந்த வாடிக்கையாளரின் தட்டில் வைத்தார்.
‘நன்றாக இருக்கிறது’ என சொல்வார் என்று எதிர்பார்த்திருந்த கிரம்முக்கு, வாடிக்கையாளரின் பதில் ஏமாற்றத்தையே தந்தது. ‘ நீங்கள் செய்த உருளைக்கிழங்கு மிகவும் தடினமனாக உள்ளது. இதை கத்தியால் கூட வெட்ட முடியவில்லை. இது மொறு மொறுப்பற்றும், பிசுபிசுப்பாகவும், இருக்கிறது; தயவு செய்து உருளையை சரியான பதத்தில் செய்து கொடுங்கள்’ என்று கார்னலியஸ் சொல்லிவிட்டார்.
சரியென்று அதை பெற்றுக்கொண்ட கிரம், உருளையின் தடிமனை குறைத்து மறுபடியும் வாடிக்கையாளரிடம் கொண்டு போய் கொடுத்தார். ஆனால், அதிலும் திருப்தியடையாத வாடிக்கையாளர், கிரம்மை சமையல் செய்யத்தெரியாதவர் என்ற அளவில் கிண்டலடித்து விட்டார். அதுவரை, பாராட்டு மட்டுமே வாங்கி பழக்கப்பட்ட கிரம்முக்கு, வாடிக்கையாளர் மீண்டும் மீண்டும் குறைசொன்னது எரிச்சலை ஏற்படுத்தியது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கிரம், வாடிக்கையாளர் இரண்டாவது முறையாக நிராகரித்த உருளைக்கிழங்கு வறுவலை நேரே சமையலறைக்கு எடுத்துக்கொண்டு போனார். உருளைக்கிழங்கை பேப்பரை போன்று மெல்லிய தடிமனில் சீவி தள்ளினார். அதில் உப்பை தூக்கலாக போட்டார். அவற்றை எண்ணெயில் கொட்டி நீண்ட நேரம் வறு வறு என்று வறுத்தார். வாடிக்கையாளர் மேல் உள்ள எரிச்சலால் தான், அப்படி செய்தார் கிரம்.
ஆனால், அதை சாப்பிட்டுவிட்டு வாடிக்கையாளர் கூறிய பதில், கிரம்முக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆஹா, அருமை. இதுபோன்ற ஒன்றை என் வாழ்நாளில் சுவைத்ததே இல்லை. இன்னொரு பிளேட் கொண்டு வாருங்கள் ’ என்று சொன்னார் வாடிக்கையாளர். அந்த பாராட்டு அத்தோடு முடியவில்லை. மிகக் குறைந்த காலத்திலேயே, கிரம்மின் கைவண்ணத்தில் உருவான உருளை சிப்ஸின் புகழ் நாடு முழுவதும் பிரபலமானது. குறிப்பாக சிறுவர்கள் பட்டாளம், உருளைக் கிழங்கு சிப்ஸுக்கு ரசிகர் சங்கம் அமைக்கும் அளவுக்கு பெருகிவிட்டனர். இப்படி தோன்றியதுதான் உருளை சிப்ஸ்.
தற்போது உள்ளவர்களிடம் போய், ஒரு வாடிக்கையாளரின் விமர்சனமும், கிரம்மின் கோபமுமே உருளை சிப்ஸின் உருவாக்கத்துக்கு காரணம் என்று சொன்னால், அதை நம்புவது சிரம்தான். ஆனால், வரலாற்று உண்மை அதுதான் என்றால், நம்பித்தானே ஆக வேண்டும்...
மு.கோபி
Comments
Post a Comment