பேப்பர் கிளிப் தோன்றிய வரலாறு


200 வருடங்களுக்கு முன்பு வரை, ஒன்றுக்கும் மேற்பட்ட காகிதங்களை எப்படி பிணைத்து வைத்திருந்தார்கள்?. ஒன்று, காகிதங்களில் மேல் இடது முனையில் ஓட்டை போட்டு, அதில் மெல்லிய கயிற்றை நுழைத்து முடிச்சு போடுவார்கள். அல்லது குண்டூசியை காகிதங்களில் செருகி பிணைத்தார்கள். ஆனால், பேப்பர் கிளிப் எனும் கண்டுபிடிப்பு, இவற்றை எல்லாம் மாற்றிவிட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் ஃப்ரே என்பவரே முதன்முதலில் பேப்பர் கிளிப் உருவாக்கியவராக கருதப்படுகிறார். 1867ல், அவர் உருவாக்கிய கிளிப் ‘எக்ஸ்’(X) வடிவத்தில் இருந்தது. இன்று ரெடிமேட் துணியை மடித்து வைக்க பயன்படும் கிளிப்பும், அவர் கண்டுபிடித்த கிளிப்பும் கிட்டதட்ட ஒன்றுதான்.

ஃப்ரே வாழ்ந்த காலத்தில், துணிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளில், விலைப்பட்டியலை செருக குண்டூசியை பயன்படுத்தினர். இதனால், பட்டு போன்ற விலையுயர் மெல்லிய துணிகளில் ஓட்டை விழுந்தன. இதை தவிர்க்க விரும்பிய ஃப்ரே, கம்பியை எக்ஸ் வடிவத்தில் வளைத்து ஒரு கிளிப்பை உருவாக்கினார். அதற்குள் துணி மற்றும் விலைப்பட்டியலை செருகினார். இதனால், துணிக்கு எந்த வித சேதாரமும் நிகழாமல் தடுக்க முடிந்தது. ஆனால், அவருடைய வடிவமைப்பும், இன்று நாம் பயன்படுத்தும் பேப்பர் கிளிப்பின் வடிவதும் ஒன்றல்ல.

இன்று நாம் ‘ஜெம்’ வகை பேப்பர் கிளிப், பொதுமக்களிடையே, முதன்முதலில் 1893லேயே அறிமுகமாயின. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த குஷ்மேன் &டெனிசன் என்ற நிறுவனம், ‘உங்கள் காகிதங்களை குண்டூசிகளை பயன்படுத்தி சிதைத்து விடாதீர்கள். ஜெம் கிளிப்பை பயன்படுத்துங்கள்’ என்ற வாசகங்களுடன் பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டது. இந்த ஜெம் கிளிப்பை கண்டுபிடித்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் புரூக்லே. மேலும்,ஜெம் கிளிப்பை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து 1899ம் ஆண்டு, புரூக்லே காப்புரிமை பெற்றார் .

உலகின் பல்வேறு இடங்களிலும், ஜெம் கிளிப்புகளை ஒத்த வடிவத்தில் பல்வேறு கிளிப் வகைகள் உருவாக்கப்பட்டன. எனினும், அவற்றில் ஒன்றிரண்டு வடிவங்களை தவிர, மற்றவை எல்லாம் பயன்பாட்டில் இருந்து காணாமல் போய்விட்டன. இரண்டடுக்கு முட்டை வடிவ ஜெம் கிளிப் மட்டுமே உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேப்பர்களை உறுதியாக பிணைத்து வைக்கும் வகையிலும், பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையிலும் ஜெம் கிளிப்பின் வடிவமைப்பு இருப்பதே இதற்கு காரணம்.

பாக்ஸ் மேட்டர்

புரட்சியின் சின்னம்

இரண்டாம் உலகப்போரின் போது, நார்வே நாட்டை, ஜெர்மனியின் நாஜிப் படையினர் கைப்பற்றினர். இதையடுத்து, நார்வே நாட்டின் தேசியக்கொடியையோ, மன்னரின் பெயரையோ முத்திரையாக சட்டையில் குத்திக்கொள்ளக்கூடாது என்று நாஜி அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாக, சுதந்திரப் போராட்ட வீரர்கள், தங்கள் சட்டைப்பைகளில் பேப்பர் கிளிப்புகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். ‘பேப்பர் கிளிப், பிணைக்கும் தன்மை கொண்டது; ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நாங்களும் ஒற்றுமையாக இருப்போம் ’ என்பதை பேப்பர் கிளிப் மூலம் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த நாஜிப்படையினர், பேப்பர் கிளிப்புகளை சட்டையில் மாட்டிக்கொள்வோரை கைது செய்து சிறையில் தள்ளியது.

மு.கோபி

Comments