ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் - துருப்பிடிக்காத இரும்பு உருவான கதை


இன்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel)பாத்திரங்கள் இல்லாதே வீடுகளே இல்லை. அந்தளவுக்கு அதன் பயன் பெரியது. இது தனி உலோகம் இல்லை, கலப்பு உலோகம். இரும்பையும், குரோமியத்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கும்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிடைக்கிறது. ஆனால், இக் கண்டுபிடிப்பு எதேச்சையாக நிகழ்ந்த ஒரு சம்பவம். 1912ல், இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி பிரியர்லி என்பவர், துப்பாக்கி குழல்களை தயாரிக்கும் வேலையில் மும்முராக ஈடுபட்டிருந்தார். அப்போதைய காலத்தில் புழக்கத்தில் இருந்த ஸ்டீல் துப்பாக்கிகள், விரைவாக துருப்பிடிக்கும் தன்மையுடன் இருந்தன.
இரும்புடன், கரிமம் கலந்து உருவாக்கப்படும் ஸ்டீல், இரும்பை விட பல வகைகளில் சிறப்புடையது என்றாலும், இலகுவாக துரு பிடித்துவிடுவது அதன் பலவீனம். இதனால், வெயில், மழை என்று எதையும் தாக்குப்பிடித்து, துருப் பிடிக்காத துப்பாக்கி குழலை உருவாக்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் ஹாரி. ஸ்டீலை, குரோமியம் மற்றும் கார்பனுடன் வெவ்வேறு அளவுகளில் கலந்து, துருவை நன்கு எதிர்க்கும் தன்மை கொண்ட உலோக கலவையை உருவாக்கும் ஆராய்ச்சியில் வெகு நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அவர். ஆனால், அவருக்கு தோல்வி மேல் தோல்வி.
இப்படியாக, சோதனைக்காக பயன்படுத்தி வீணான உலோக பொருட்களை சேமிப்பதற்கென்றே ஒரு குடோனை வைத்திருந்தார் ஹாரி. பல மாதங்களுக்கு பிறகு, ஏதோவொரு தேவைக்காக அவருடைய குடோனுக்கு சென்று பார்த்தபோது, அவருக்கு ஒரே ஆச்சர்யம். காரணம், உலோக பொருட்களின் குப்பை மேட்டில், ஒரே ஒரு வகை ஸ்டீல் பொருள் மட்டும் துருப்பிடிக்காமல் இருந்தது. அதை பரிசோதித்தபோது, அந்த ஸ்டீலில், 12.8 சதவீத குரோமியம் மற்றும் 0.24 சதவீத கார்பன் கலந்திருந்தது தெரியவந்தது. இதுவே, முதல் துருப்பிடிக்காத ஸ்டீல் உருவாக்கம் என்று கருதப்படுகிறது. அதை, எலுமிச்சை சாறு, அமிலங்கள், வினிகர் என்று பலவற்றில் போட்டு முக்கி எடுத்தாலும், எளிதில் துருவோ, கறையோ படியாததை கண்டு ஹாரி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். உடனே, அதைக் கொண்டு வலிமையான கத்தி, அவற்றை சந்தையில் பிரபலபடுத்தினார் ஹாரி.
இதே காலகட்டத்தில், அமெரிக்கா மற்றும் இன்னபிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு விஞ்ஞானிகளும், துருப்பிடிக்காத கலவை இரும்பு உலோகத்தை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் )கண்டுபிடித்ததாக கூறினர். அதனால், இன்றளவும், யார் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை முதலில் கண்டுபிடித்தது என்பது குழப்பமானதாகவே இருந்து வருகிறது.
எது எப்படியோ, பல்வேறு விஞ்ஞானிகளின் உழைப்பே, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அதன் வளர்ச்சியின் உச்சியை எட்ட காரணம் என்பதில் சந்தேகமில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும், வலிமையான கத்தி, பாத்திரங்கள் தொடங்கி உணவு சேமிப்பு, மருத்துவம், கட்டுமானம், வாகனத்தயாரிப்பு என்று பலவற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்டல்கள், வீடுகளில் வைக்கப்படும் புகைபோக்கிகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால்தான் தயாரிக்கப்படுகின்றன. வாஷிங் மெஷின், கிரைண்டர், ஏர்கூலர், ஏ.சி. போன்ற தண்ணீர் புழக்கம் உள்ள மின் பொருட்களில் ஸ்குரூ ஆணிகள் தொடங்கி, நாற்காலி, பஸ் நிலையங்களில் மேற்கூரை என ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எங்கும் வியாபித்து உள்ளது.
மு.கோபி
Comments
Post a Comment