மாடர்ன் பிரின்டர் உருவாக்கிய குட்டன்பெர்க்



பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான், மனிதக்குலத்தின் அறிவு வளர்கிறது. ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஓர் உலகத்தை, தற்போது கற்பனை செய்ய முடியாது. ஆனால், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை, புத்தகங்கள் என்பது அறிஞர்களிடம் மட்டும் புழங்கக்கூடியதாக இருந்தது. அப்போது அச்சு இயந்திரம் இல்லாததால், புத்தகங்கள் கைகளால் எழுதி பிரதி எடுக்கப்பட்டன.
இதைப்பார்த்த ஒருவர், புத்தகத்தை இயந்திரங்களின் உதவியோடு பிரதி எடுத்தால், எளிதில் பல  புத்தகங்களை உருவாக்க முடியும். எல்லோராலும் படிக்க முடியுமே என்று சிந்தித்தார். அப்படி ஒரு மனிதரின் சிந்தனைதான், இந்த உலகின் வரலாற்று போக்கையே மாற்றி அமைத்தது. அந்த மனிதர் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க். (Johannes Gutenberg)
குட்டன்பெர்க்கை பற்றிய குறிப்புகள் துல்லியமாகத் தெரியவில்லை. அவர் 1399-ம் ஆண்டு பிறந்தார் என, தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மெயின்ஸ் என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. அப்போதிருந்த புத்தகங்கள், கைகளால் எழுதப்பட்டவை. புத்தகங்கள் கிடைப்பதும் அவ்வளவு எளிதல்ல. அவர் வளர்ந்து வந்த சமயத்தில், புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை வழக்கத்தில் இருந்தது. அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில், ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி வைத்துக்கொண்டு, அதில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.
இந்த முறையில், ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும், ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும். எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் வேகமானதுதான். இந்த புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில், குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று, அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்துவிட்டு, அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார்.
குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. முயற்சிகள் தோல்வியடைந்ததால், பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஒருநாள் கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான ஜோகன் ஃபஸ்ட் என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சு இயந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட ஃபஸ்ட், குட்டன்பெர்க்கிற்கு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க், பல முயற்சிகளுக்குப் பிறகு ‘மூவபிள் டைப்’ (Movable type) எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால், அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோக அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.
தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு, லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள், நவீன அச்சு முறையில் உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு பக்கத்திலும், 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால், அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது.
அந்தக் காலகட்டத்தில், கையால் எழுதப்பட்ட பைபிளின் விலை மிக அதிகம். குட்டன்பெர்க், அச்சிட்ட பைபிளை, குறைந்த விலைக்கு விற்றார். எனினும், அவரால் கடன் வாங்கிய பணத்தை அடைக்க முடியவில்லை. பொறுமையிழந்த ஃபஸ்ட், குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக, நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே எடுத்துக் கொண்டார். உன்னதமான கண்டுபிடிப்பை செய்தும், அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் வறுமையில் வாடி, 1468-ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் இறந்தார் குட்டன்பெர்க். கடந்த 500 ஆண்டுகளில், உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு, அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால், உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின.

சீனாவை முந்திய ஐரோப்பா
குட்டன்பெர்க் இயந்திரம் கண்டு பிடிக்கப்படாத காலகட்டத்தில், ஐரோப்பாவும், சீனாவும் தொழில் நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சு இயந்திரம் வந்த பிறகு, அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா, எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால், பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்து பின்பற்றிய சீனா, பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே, உலக வரலாற்றில் குட்டன்பெர்க் பங்களிப்பின் முக்கியத்துவத்தை, உணர்த்துவதாய் உள்ளது.

முக்கிய  கண்டுபிடிப்பு

இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில், மிகச்சிறந்ததாக பலரும் கூறுவது அச்சு இயந்திரத்தைத்தான். காரணம், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், நிறைய புத்தகங்கள், செய்தித்தாள்கள் உருவாகின; பொது நூலகங்கள் தோன்றின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிமையாக மாறியது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபார வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை, நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான், உலகின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும், நாம் குட்டன்பெர்க்கிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும்.

– மு.கோபி

Comments