மணம் வீசும் சோப்பு பிறந்த கதை
![]() |
விலையுயர்ந்த சிரியா அலப்போ சோப்புக்கட்டி |
‘சோப்பு இல்லாத குளியல் எல்லாம் ஒரு குளியலா?’ என்று கேட்கும் அளவுக்கு, அது நம் குளியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. வெறும் தண்ணீரில் குளிப்பதைக் காட்டிலும், சோப்பு போட்டு குளித்தால் தான் எளிதில் அழுக்குகள் போகும் என்பதை அறிந்து வைத்துள்ளோம். துணிதுவைக்க, பாத்திரம் கழுவ, உடல் குளிக்க என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சோப்பு கிடைக்கும் நிலையில், ஆரம்ப காலத்தில் எல்லாவற்றுக்கும் ஒரே சோப்புதான் பயன்படுத்தப்பட்டது.
4800 ஆண்டுகளுக்கு முன் (கி.மு., 2800ல்), பாபிலோனியர்கள் தான் (இன்றைய ஈராக் பகுதி) முதன்முதலில் சோப்பை பயன்படுத்தினர். மன்னர் நபோனிதஸ் ஆட்சிக்காலத்தில், அரண்மனை பளிங்குகற்களை கழுவ, பெண் பணியாளர்களர்கள் சாம்பல், புன்னை எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் ஆகியவற்றின் கரைசலை பயன்படுத்தினர். இதைக்கண்ட மன்னர், ரசவாதிகளுடன் (வேதியியலாளர்கள்) விவாதித்து, கறை அகற்றும் கடின பொருளை தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதுவே, சோப்பு தொழில்நுட்பம் உருவானது.
ரசவாதிகள், சாம்பல், விலங்கு கொழுப்புகள், மெழுகு மற்றும் உப்பு ஆகியவற்றை கொண்டு காரகரைசலை தயாரித்தனர். பின்னர் அதை அப்படியே கொதிக்கவைத்து, வற்ற செய்து சோப்பு கட்டிகளை தயாரித்தனர். இதுவே, மனிதர்கள் தயாரித்த முதல் சவக்காரமாக(சோப்பு) கருதப்படுகிறது. இத்தொழில்நுட்பம், ரோம், சிரியா, எகிப்து மற்றும் மொரோக்கோ போன்ற தேசங்களுக்கு பரவி வளர்ச்சியடைந்தது. ஆரம்ப காலத்தில் கடின கறைகளை அகற்றவும், துணிதுவைக்கவும், தோல்வியாதிகளுக்கான சிகிச்சைக்காவும் மட்டுமே சோப்பு உபயோகிக்கப்பட்டது. காலப்போக்கில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் மென்மையாகவும், வாசனையுடன் சோப்பு தயாரிக்கப்பட்டது.
நவீன சோப்பின் பிறப்பிடமாக, சிரியாவின் அலெப்போ நகரம் கருதப்படுகிறது. விலங்கு கொழுப்புகளுக்கு பதிலாக, இயற்கை எண்ணெயின் பயன்பாடு தொடங்கியது இங்குதான். சிரிய சோப் உற்பத்தியாளர்கள், ஆலிவ் எண்ணெய், பே லாரல் (Bay laurel Tree) மர எண்ணெய்(வாசனைக்காக) மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் குளிர்ச்சியாக்கினர். பின்னர், அவற்றை கட்டி கட்டியாக வெட்டி, ஏழு மாதங்கள் நிழலில் காயவைத்தனர். அப்படி காயவைக்கும்போது, அது பச்சை நிறத்திலிருந்து, பிரவுன் நிறத்துக்கு மாறும். எகிப்து ராணி கிளியோபாட்ரா மற்றும் சிரிய ராணி செனோபியா ஆகியோர் இந்த சோப்பையே பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. விலை அதிகமான இந்த சோப், இன்றும் உலகளவில் பிரபலமாக உள்ளது.
பின்னர் கி.பி., 11ம்நூற்றாண்டில், சிரியாவுக்கு படையெடுத்த சிலுவை போர் வீரர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லும்போது சோப்பு தொழில்நுட்பத்தை உடன் கொண்டு சென்றனர். அதனைத்தொடர்ந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஏராளமான சோப் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மலாகா, கேஸ்டைல், அலிகான்டே, சாவோன், ஜெனோவா, நேப்பிள்ஸ், வெனிஸ் போன்ற நகரங்கள், சோப் ஏற்றுமதியின் முக்கிய மையங்களாக மாறின. சிறிது காலத்தில், சோப்பு போட்டு குளிக்கும் பழக்கம் மக்களிடையே பரவி, சோப்பில்லாமல் குளியலில்லை என்ற நிலை உருவானது.
மு.கோபி
Comments
Post a Comment