மை ஒழுகா பந்துமுனை (பால்பாயின்ட்) பேனா...

மனிதர்களின் தனிச்சிறப்பு, எழுத்துகள் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்துவது. பேனா என்கிற ஒன்று இல்லாவிட்டால், எப்படி எழுத முடியும்? ஆதிகாலத்தில் எழுத்தாணி, பறவை இறகு போன்றவற்றை பயன்படுத்தி எழுதினார்கள். அதிலிருந்த சிரமங்கள் இன்று நமக்கு கிடையாது. குறிப்பாக, மை ஒழுகாத பால் பாயின்ட் பேனா உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி உருவானது தெரியுமா?
ஹங்கேரிய நாட்டு பத்திரிகையாளர் லாடிஸ்லோ பிரோ என்பவர்தான், பால் பாயின்ட் பேனா கண்டுபிடிப்பின் முன்னோடி. அவருக்கு, மை ஒழுகும் ஃபவுன்டெய்ன் இங்க் பேனா ஒத்துவரவில்லை. பத்திரிகை அச்சுக்காக பயன்படும் மை விரைவாக காய்ந்துவிடுகிறது என்பதை கவனித்த அவர், ஃபவுன்டெய்ன் இங்க் பேனாவில் அந்த மையை ஊற்றி எழுத முயன்றார். ஆனால், அதிலிருந்த நிப் வழியாக மை வெளிவரவில்லை. இதையடுத்து, 1938ல், முற்றிலும் புதிய முறையிலான பேனாவை வடிவமைத்தார் லாடிஸ்லோ பிரோ. இதற்கு, அவருடைய தம்பி ஜார்ஜியா நிறைய உதவினார்.
சர்க்கரை பாகு போன்ற கட்டியான மையை எடுத்து, அதை ரீஃபிளில் ஊற்றினார் லாடிஸ்லோ பிரோ . பின்னர், எழுது கருவி முனையில் பந்து உருளையை பொருத்தினார். மையை ஈர்த்து தாளில் அப்புவதுதான் முனை பந்தின் வேலை. எழுத எழுத பந்தும் உருளும்; பந்து உருள உருள, தாளில் மை படும். இதுதான் பால் பாயின்ட் பேனாவில் அடிப்படை கோட்பாடு.
ஆனால், எடுத்த உடனேயே எந்த கண்டுபிடிப்பும் வரவேற்பை பெறாது அல்லவா? பால் பாயின்ட் பேனாவும் அந்த விதிக்கு தப்பவில்லை. ஆரம்ப காலம் தொட்டே, பால் பாயின்ட் பேனா என்றாலே, ஆசிரியர்களுக்கு ஒவ்வாமைதான். ‘என்ன இருந்தாலும் ஃபவுன்டெய்ன் இங்க் பேனாவில் எழுதும்போது கிடைக்கும் அழகு வருமா? எழுத்தையே கந்தர்வகோலமாக்கி விடுமே’ என்று புகார் அறிக்கை வாசித்தனர். அதில் உண்மையும் இருந்தது. எழுதுவதற்கு அதிக அழுத்தம் கொடுத்தால் தான், பால்பாயின்ட் பேனா சீராக இயங்கும். இதனால், விரைவிலேயே கை வலி எடுத்துவிடும். மட்டுமின்றி, ஆரம்பத்தில் பால்பாயின்ட் செங்குத்தாக பிடித்துக்கொண்டு தான் எழுத வேண்டிய நிலை இருந்தது. அப்படி எழுதினால்தான், மை சீராக வெளிவரும். தவிர, திடீரென்று சூடு தாங்காமல் ரீஃபிள் வெடித்துவிடும். இப்படி ஏராளமான பிரச்னைகள் இருந்தன. இதனால், பால்பாயின்ட் பேனாவில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.
பிரிட்டன் விமானப்படை, இரண்டு உலகப்போரில் பால் பாயின்ட் பேனாவை பயன்படுத்தியது. இதற்கு காரணம், ஆகாய உயரத்திலும் மை ஒழுகாமல் சமத்தாக எழுதியதுதான். இது, பால் பாயின்ட் பேனாவுக்கு உலகெங்கும் இலவச விளம்பரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. துணியிலும் எழுதலாம், தோளிலும் எழுதலாம், மழையில் நனைந்தாலும் அழியாமல் இருக்கும் என்பன போன்ற வசதிகள் பால் பாயின்ட் பேனாவின் மீது பொதுமக்களின் பார்வையை திருப்பியது. இன்று, அனைவரின் கைகளிலும் பால் பாயின்ட் பேனா தவழ்கிறது.
Comments
Post a Comment