உலகை இயக்கும் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை


இன்றைய நிலையில், பெட்ரோல் இல்லாத உலகத்தை கற்பனை செய்தே பார்க்க முடியாது. உலகத்தின் வேகமான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் எரிசக்தியாய் திகழ்வது பெட்ரோல்தான். திரவத் தங்கம் எனப்படும் பெட்ரோலை முன்வைத்துதான், உலகெங்கும் பல்வேறு போட்டிகளும் போர்களும் நடக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.


கரையானுக்கு வில்லன்


பண்டைய பாபிலோனிய (இன்றைய ஈராக் ) நாட்டினர்தான் முதன் முதலில் கச்சா எண்ணெயை பயன்படுத்தியவர்கள். பிரபல கிரேக்க வரலாற்றாசிரியர்களான ஹெராடாடஸ் (Herodotus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) ஆகியோர் இதுதொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஈராக்கிலுள்ள ஆண்டேரிக்கா (Andericca) என்ற இடத்தில் ஒரு கட்டடத்தின் கட்டுமானதிற்காக ஆழமாக குழி தோண்டியபோதுதான், கச்சா எண்ணெய் முதலில் வெளிப்பட்டது. ஆனால், இது எரிபொருளாக பயன்படும் என்று அம்மக்களுக்கு தெரியவில்லை. மாறாக, சிறந்த பூச்சித்தடுப்பு பொருள் என்பதை கண்டுபிடித்தனர்.

அதாவது, கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவிட்டு வற்றவிடுவதன் மூலம் கிடைக்கும் ‘நீலக்கீல்’ (Asphalt) எனப்படும் தாரை, அஸ்திவாரச் சுவர்களின் அடிப்பகுதியின் மீது சாயமாக (பெயின்ட்) பூசினார்கள். அதனால், கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து அந்தச் சுவர் பாதுகாப்பு பெற்றது. இதனால், நீண்டகாலமாக கச்சா எண்ணெய், சுவருக்கான சாந்து (பெயின்ட்) பொருளாகவே பயன்பட்டது.

அதன்பின்னர், கச்சா எண்ணெயை விளக்கெரிக்கப் பயன்படுத்தினர். இதனால், அந்த நகரே ஒளிமயமானது என்று வரலாறு குறிப்பிடுகிறது. பாபிலோனியரைத் தொடர்ந்து, பெட்ரோலைக் கண்டறிந்து பயன்படுத்தியவர்கள் சீனர்கள். உலகின் முதல் நவீன எண்ணெய்க் கிணறு கி.பி.347–ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. மூங்கில் கம்புகளின் உதவியுடன் துளையிடப்பட்ட அந்தக் கிணறு, 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது.


தார் தந்த பாதை

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய், விளக்கு எரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், ஈராக் தலைநகர் பாக்தாத் முழுவதும், தார் பயன்படுத்தி அழகான சாலைகள் அமைக்கப்பட்டன. உலகில் முதன் முதலாக தார்ச் சாலைகள் போடப்பட்டது இங்குதான். இதனைத் தொடர்ந்து, அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் தேடும் பணி தொடங்கியது. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற புவியியல் வல்லுநர் அஜர்பைஜான் (Azerbaijan) என்ற நாட்டில் உள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய்க் கிணறுகள் வெட்டப்பட்டன.

இதனிடையே, கச்சா எண்ணெயிலிருந்து மண்ணெண்ணெயைப் பிரித்தெடுக்கும் முறையை ஜப்பான் நாட்டை சேர்ந்த சில வேதியியலாளர்கள் கண்டுபிடித்தனர். அந்தத் தொழில்நுட்பத்தை முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865- – 925) என்ற ஈரான் வேதியியலாளர், மேம்படுத்தி பெட்ரோலை பிரித்தெடுத்தார். இதற்காக, அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை அவர் உருவாக்கினார். பெட்ரோலை அப்போது ‘வெடித்து எரியும் நீர்’ என்று பெயரிட்டு அழைத்தனர். அந்த காலத்தில் ஆட்டோமொபைல் வாகனங்கள் இல்லாததால், ராணுவத்தில் ஆயுதமாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்தது.

பெட்ரோலின் முகத்தை மாற்றிய ஆட்டோமொபைல்

என்னதான் பன்னெடுங்காலமாக கச்சா எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், 20ம் நூற்றாண்டில்தான் பெட்ரோல் மிக முக்கியப் பொருளாக மாறியது. காரணம், உலகில் நிகழ்ந்த இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள். அவை, ஜெர்மன் பொறியாளர் நிக்கோலஸ் அகஸ்ட்ஸ் ஆட்டோ, 1876 ம் ஆண்டில் கண்டுபிடித்த, உள்ளெரி இன்ஜின் மற்றும் 1893ம் ஆண்டு, ருடால்ப் டீசல் (Rudolf Diesel) கண்டுபிடித்த டீசல் இன்ஜின்.

இதைத் தொடர்ந்து, ஏற்பட்ட வாகனப்பெருக்கம் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக, கச்சா எண்ணெயின் தேவை அசுர வேகத்தில் அதிகரித்தது. பல நாடுகளிலும், 1930க்கு பிறகு பெட்ரோலியத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய நிலையில், பெட்ரோலிய உற்பத்தியில், செளதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. ↔மு.கோபி



கச்சா எண்ணெய் உருவானது எப்படி?

பெட்ரோலுக்கு மூலாதாரமாக இருப்பது கச்சா எண்ணெய். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயற்கை பேரிடரால் கடலுக்குள் மூழ்கிய ஏராளமான மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்களின் மீது மணல், களிமண் போன்றவை படிந்தன. நாளடைவில் அவை ஏற்படுத்திய அழுத்தம் மற்றும் வேதியியல் மாற்றங்கள் காரணமாக, மனித மற்றும் விலங்குகளின் எச்சங்கள், கறுப்பு கல் வளமாக மாற்றமடைந்தன. பூமிக்கடியில் புதைந்து கிடைக்கும் இவற்றையே, கச்சா எண்ணெய் வளம் என்கிறோம். லத்தீன் சொல்லான ‘பெட்ரா’ என்பதற்கு கல் என்றும், ‘ஓலியம்’ என்பதற்கு எண்ணெய் என்றும் பொருள். அதன்படி, ‘பெட்ரோலியம்’ (Petroleum பெட்ரா+ஓலியம்) என்றால், கல்லில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் என்பது பொருள்.



பீய்ச்சியடித்த பெட்ரோல் கிணறு

1908ம் ஆண்டு ஈரான் நாட்டில், ஒரு பிரிட்டிஷ் கம்பெனி எண்ணெய்க் கிணறு ஒன்றை வெட்டி, எண்ணெய் எடுத்ததே இன்றைய கச்சா எண்ணெய் வர்த்தக தொழிலுக்கு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. மஸ்ஜித்–இ–சுலைமான் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், அந்த கம்பெனியைச் சேர்ந்த ‘ஜியார்ஜ் ரெனால்ட்ஸ்’ (George Reynolds) 1,180 அடி ஆழம் தோண்டினார். அப்போது, எண்ணெய் பொங்கி 75 அடி உயரத்துக்கு பீய்ச்சி அடித்தது. இதன் பயனாய், ஆங்கிலோ-பெர்சிய எண்ணெய் நிறுவனம் (Anglo-Persian oil Company) உருவானது. பின்னர் அது பல வடிவங்களில் உருமாறி, தற்போது புகழ்பெற்ற பிரிட்டிஷ் பெட்ரோலியம் (British Petroleum) நிறுவனமாகத் திகழ்கிறது.

Comments