சமையலறையில் உருவான ஜெராக்ஸ் இயந்திரம்

மனிதர்களுடைய அன்றாட வாழ்வில், ஜெராக்ஸ் இயந்திரத்தின் பங்கு மிகப்பெரியது. புத்தகம், சான்றிதழ்கள், ஆவணங்கள் என்று எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் நகல் செய்து விட முடியும். நமக்கு பெரும் வசதியாய் அமைந்துள்ள இந்த இயந்திரம், பல ஆண்டுகள் உழைப்பில் உருவானது.
கடந்த 1937ல், அக்டோபர் மாதம்தான், உலகின் முதல் ஜெராக்ஸ் இயந்திரம் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்ஸன் என்பவரே, நவீன ஜெராக்ஸ் இயந்திரத்தை உருவாக்கியவர். கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர், இளவயதில் இருந்தே இயற்பியல் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார். கார்ல்ஸன், காப்புரிமை தொடர்பான ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கு, ஏராளமான ஆவணங்கள் புழங்கிய நிலையில், அவற்றை நகலெடுத்து பத்திரப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், அந்த காலத்தில்தான் ஜெராக்ஸ் இயந்திரம் இல்லையே! மிகுந்த சிரமத்துடனே நகலெடுக்க வேண்டும். இதற்காக, கார்பன் தாள் நகல் முறை, ஆவணங்களை ரசாயனத்தில் நனைத்து நகலெடுக்கும் முறை போன்ற சில தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வந்தன.
கார்ல்ஸனுக்கு மூட்டுவலி இருந்த நிலையில், அவரால் அதிக ஆவணங்களை நகலெடுக்க முடியவில்லை. குறைந்த நேரத்தில், அதிக ஆவணங்களை பிரதி எடுக்க முடிந்தால், நன்றாக இருக்குமே என்று கனவு கண்டார். இந்த நேரத்தில் அவரது கனவை நனவாக்க, இயற்பியல் அறிவு கைகொடுத்தது. பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் கண்டறிந்த ஒளிமின் நிகழ்வு (photo electricity) எனும் அறிவியல் விதியை அடிப்படையாக வைத்து, கார்ல்ஸன் ஆராய்ந்தார்.
இருட்டாக இருக்கும்போது, மின்சாரம் பாயாமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருட்களின் மீது ஒளிக்கதிர்களைப் படவைத்தால், அவை மின்சாரத்தை கடத்தும். இது ஒளிமின் நிகழ்வு. அதுபோல முடி, பட்டுத்துணி, எணணெய்தோய்த்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும். இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து, நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன். அவருடைய சமையல் அறையில்தான், இதற்கான சோதனைகளை நிகழ்த்தினார்.
கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளால் பூச்சு ஏற்படுத்தி, அதில் நிலை மின்சாரத்தை உருவாக்கினார். அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து, அதன் வழியே ஒளியைப் பாய்ச்சினார். தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது. அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும், நிலைமின்சாரம் அகன்று விட்டது. இந்த முறையை நகலெடுக்க வேண்டிய ஒரு தாளில் பதியவைத்து வெற்றியும் பெற்றார். அதுவே பின்னாளில், ஜெராக்ஸ் இயந்திரத்துக்கு அடிப்படையாக அமைந்தது.
தனது புகைப்பட நகல் (Photocopying Machine) கருவியை, 1938ல் சந்தையில் அறிமுகம் செய்தார். ஆனால், இன்று நாம் பார்ப்பதுபோல், அவருடைய கருவி முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. தெளிவில்லாத எழுத்துகள், சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற சில காரணங்களால், ஐ.பி.எம். உள்ளிட்ட நிறுவனங்கள், அவரது கருவியை பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்ப்பரேஷன், ஜெராக்ஸ் இயந்திரத்தை மெருகூட்டுவதற்கு தேவையான முயற்சிக்காக, பணம் வழங்க முன்வந்தது. பல லட்சக்கணக்கான டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், 1950ல் புதிய கருவி வெளியிடப்பட்டது. இந்த முறையும் பொதுத்தளத்தில் இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும், அச்சுத்துறை மற்றும் ராணுவத்துறையில் அந்த கருவி பெரும் பயனாய் அமைந்தது.
மனம் தளராமல், அடுத்த பத்து ஆண்டுகள் ஜெராக்ஸ் கருவி மேலும் மெருகூட்டப்பட்டது. 1960ம் ஆண்டு மார்ச் மாதம் “ஜெராக்ஸ் 914“ சந்தைக்கு வந்தது. கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து, குறுகிய காலத்திலேயே ஹோலாய்ட் கார்ப்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன. நிறுவனத்தின் பங்குமதிப்பு இமலாய சிகரமாக உயர்ந்தது. செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும், இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தன. ஜெராக்ஸ் இயந்திரம் மட்டுமல்ல, கார்லஸனின் நம்பிக்கையும் வெற்றி பெற்றது.
-– மு.கோபி

Comments