பூட்டுக்கு எங்கே சாவி?


எகிப்தியர்கள், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சாவி முறை பூட்டை கண்டுபிடித்து, பயன்படுத்தி வந்தனர். அது மரத்தால் ஆனதாக இருந்தது. இன்றைய நவீன உலகில், வீடுகளில் பயன்படுத்தும் பின் லீவர் (நெம்புகோல்) வகை பூட்டுகள், எகிப்தியர்களின் பூட்டை அடிப்படையாகக் கொண்டதே. ஆனால், பண்டைய கால பூட்டுகள் மற்றும் சாவிகளின் அளவு, மிகப் பெரியதாக (சில சமயம் மனிதர்கள் தோளில் சுமந்து செல்லக்கூடிய அளவிலும்கூட) இருந்தன. (படம்). இதன்பின்னர், கி.பி.900ம் ஆண்டு, எகிப்திய பூட்டுகளை மேம்படுத்திய ரோமானியர்கள், மரத்துக்குப் பதிலாக இரும்பால் ஆன பூட்டு மற்றும் வெண்கலச் சாவியையும் பயன்படுத்த ஆரம்பித்தனர். பல நூறு ஆண்டுகள், அதே அடிப்படையில் பூட்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர், 1788ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ராபர்ட் பார்ரன் என்பவர், பூட்டின் தொழில்நுட்பத்தில் நுட்பமான சில மாறுதல்களை ஏற்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தினார். இரட்டை லீவர் முறை என்றழைக்கப்பட்ட அவருடைய பூட்டில், இரண்டு நெம்புகோல்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று பத்து லீவர் பூட்டுகளெல்லாம் வந்துவிட்டன.

பின்னர், 1818ம் ஆண்டு ஜெரேமியா சப் என்பவர், ஸ்பிரிங் (சுருள்) தொழில்நுட்பத்தை புகுத்தி, பூட்டின் பாதுகாப்பு அம்சத்தைக் கூட்டினார். ஜோசப் பிராமா, பூட்டின் உருளைகளில் புதிய மாறுதல்களைச் செய்து, பூட்டு தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். தான் உருவாக்கிய பூட்டை, கள்ளச்சாவி போட்டுத் திறக்க முடியாது என்று பிராமா விட்ட சவாலை முறியடிக்க, 50 ஆண்டுகளுக்கும் அதிகமானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்நிலையில், 1848ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த லினஸ் யேல் என்பவர், பண்டைய எகிப்திய பூட்டை அடிப்படையாக வைத்து, அதிலேயே பல பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்தார். இன்றளவும், இந்தப் பூட்டுக்களே அதிகளவில் நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நகைக்கடைகள், வங்கிகள், நிறுவனங்கள் போன்றவற்றில் நிகழும் கொள்ளைகளைத் தடுக்க, அதிக பாதுகாப்பு நிறைந்த பூட்டுகள் தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. எத்தனை பூட்டுகளைத் தயாரித்தாலும், அதையும் கள்ளத்தனமாக உடைக்கும் வழியை, திருடர்கள் கண்டுபிடித்து விடுவதால், நாளுக்கு நாள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் பூட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
– மு.கோபி


இந்தியாவில் பூட்டு வரலாறுஇந்தியாவில் பூட்டுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று உ.பி., மாநிலம் அலிகார்; மற்றொன்று திண்டுக்கல். அலிகாரில் உள்ள ஆயிரத்து ஐநூறு பூட்டு தொழிற்சாலைகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். லீவர், பின் சிலிண்டர் என, இரு வகை பூட்டுகள் உள்ளன. இவற்றில், பின் சிலிண்டர் ரகப் பூட்டுகள்தான், அலிகாரில் அதிகம் தயாராகின்றன. ரூ.10 முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள பூட்டுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் பூட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்றொரு பெயர்பெற்ற பூட்டு தயாரிப்பு பகுதி, திண்டுக்கல். 1930ம் ஆண்டு, திண்டுக்கல்லில் முதன்முதலில், பரட்டை ஆசாரி என்பவர் பூட்டுக்களைத் தயாரிக்கத் தொடஙகி, வேகமாக புகழடைந்தார். அவருடைய பூட்டுகள், 1945ம் ஆண்டு வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல், தற்போது உயர்ரகப் பூட்டுகளுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது.

Comments