போரில் உயரம் தொட்ட ‘டவர் கிரேன்’


அடுக்குமாடிகள் கட்டப்படும் இடங்களில் எல்லாம், தவறாமல் டவர் கிரேனைப் பார்க்கமுடியும். கட்டுமானப் பொருட்களை எந்த உயரத்திற்கும், எந்த திசையிலும் எடுத்து செல்வதற்கு, டவர் கிரேன்களே பெரிதும் பயன்படுகின்றன. 
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹேன்ஸ் லீபெர் (Hans Liebherr) என்ற பொறியாளர், 1949ம் ஆண்டில் முதலாவது டவர் கிரேனை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியின் முக்கிய கட்டடங்கள் எல்லாம், தரைமட்டமாகிப் போய்விட்டன. மிச்சமிருந்த கட்டடங்களும் கடுமையான சேதம் அடைந்திருந்தன. போரின் பாதிப்பிலிருந்து ஜெர்மனி உடனடியாக மீண்டு வருவதற்கு, கட்டடங்களை விரைவாக கட்டி முடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்குப் போதுமான நவீன இயந்திரங்கள் எதுவும் அப்போது இல்லை. அந்தத் தேவையை நிறைவு செய்வதற்காகவே, டவர் கிரேன் உருவாக்கப்பட்டது.
மனித சக்தியை விடவும் பல நூறு மடங்கு திறனும் வேகமும் கொண்டது, டவர் கிரேன். இதைப் பயன்படுத்தி 2 டன் முதல் 12 டன் வரையிலான பொருட்களையும் தூக்க முடியும். பொதுவாக 12 மீட்டர் உயரத்துக்கு மேலே உள்ள கட்டடங்களுக்கு இந்த கிரேனை பயன்படுத்தலாம்.
ஆரம்ப காலத்தில், மேற்கத்திய நாடுகளிலும் பின்னர் சீனாவிலும் மட்டுமே டவர் கிரேன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, இந்தியாவில் குறிப்பாக சென்னையிலேயே இந்த கிரேன்கள் தயாரிக்கப்படுகின்றன. -– மோகன்

Comments