பீட்சா உருவானது எப்படி?
நம்மூர் பரோட்டோ, சப்பாத்தியை போல், பீட்சாவும் ஒருவகை தட்டை ரொட்டிதான். ஏறக்குறைய 3 ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக பீட்சா என்ற தட்டை ரொட்டி, சாதாரண மக்களின் உணவாகவே இருந்து வந்தது. நமக்கு கிடைப்பது போல் சீஸ் ( பாலாடைக்கட்டி), மிளகாய் தூவிகள், சுவைமிகு காய்கறிகள் திணிக்கப்பட்ட பீட்சா, ஆரம்பகாலத்தில் இல்லை. சாதாரண தட்டை ரொட்டியையே அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.
1889ம் ஆண்டில், அப்போதைய இத்தாலி ராணியான மார்கரிட்டா மற்றும் ராஜாவான முதலாம் ராக் உம்பர்டோ நேப்பிள் பகுதியில் நகர்வலம் சென்றனர். அப்போது, அந்நகர ஏழைகள் விரும்பி சாப்பிட்டு வந்த தட்டை ரொட்டியை, ராணி சுவைத்து பார்த்தார். அவ்வளவுதான், ராணி தட்டை ரொட்டியின் பரம ரசிகையாகவே மாறிவிட்டார். உடனே தனது அரண்மனை சமையல்காரரை அழைத்த ராணி, ‘எனக்கு தட்டை ரொட்டியை தயார் செய்’ என்று உத்தரவிட்டார்.
இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த அரண்மனை சமையல்காரர் ரஃபேல் எஸ்போசிடா, தட்டை ரொட்டிக்கு புதிய பரிமாணம் அளித்தார். அதில், இத்தாலிய சிகப்பு தக்காளி, சீஸ், துளசி இலைகள் போன்றவற்றை ஒரு அளவான விகிதத்தில் சேர்த்து ராணியிடம் கொடுத்தார். அவர் தயாரித்த தட்டை ரொட்டியில், இத்தாலிய தேசிய கொடியின் வண்ணங்களான சிவப்பு (தக்காளி), வெள்ளை, பச்சை இருக்கும்படி பார்த்து கொண்டார். இன்று, மார்கரிட்டா பீசா என்று நம்மிடையே பிரபலமாக உள்ளது இந்த வகைதான்.
ரஃபேலின் கைவண்ணத்தில் உருவான பீட்சாவின் சுவையில் சொக்கிப்போன ராணி, தனது அரண்மனைக்கு வரும் விருந்தினர்களுக்கு எல்லாம், பீட்சாவை கொடுத்து விரும்தோம்பினார். நாளடைவில், அது பொதுமக்களிடையேயும், பக்கத்து நாடுகளிலும் பிரபலமாகியது. எந்தளவுக்கு என்றால், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில்,‘பீசாவை மக்கள் அதிகம் தயாரிக்கக்கூடாது. இத்தாலியில் உணவுப்பஞ்சம் வந்துவிடும்’ என்று சர்வாதிகாரி முசோலினி கட்டளையிடும் அளவுக்கு...
இரண்டாம் உலகப்போரின் போது, இத்தாலிக்கு படையெடுத்து வந்த அயல்நாட்டு வீரர்களின் மனத்தை பீட்சா படையெடுத்து ஆக்கிரமித்தது. திரும்பிச்செல்லும்போது எதை கொண்டு சென்றார்களோ இல்லையோ, பீட்சாவையும், அதன் தயாரிப்பு முறையையும் மறக்காமல் அவர்கள் கொண்டு சென்றார்கள். இப்படித்தான் உள்ளூர் பீட்சா உலக பீட்சாவாக ஆனது. அடுத்தமுறை நீங்கள் பீட்சா சாப்பிடப்போனால், அதன் வரலாறையும் சேர்த்தே அசை போடலாம்தானே!.
பீட்சாவுக்கு முன்னோடி
நவீன பீட்சா இத்தாலிய அரண்மனையிலிருந்து உருவாக்கப்பட்டதாக படித்தோம். ஆனால், பண்டைய கிரேக்கர்கள், வதக்கப்பட்ட வெங்காயம், பூண்டு மற்றும் காய்கறிகளை ரொட்டியில் பரப்பி சாப்பிட்டுள்ளனர். மற்றொரு வரலாற்று குறிப்பில், கி.மு., 6ம் நூற்றாண்டில், பாரசீக முதலாம் டாரியஸ் மன்னன், தனது படைவீரர்களுக்கு சீஸ் மற்றும் பேரீச்சம்பழங்களை ரொட்டித்துண்டில் பரப்பில் கொடுத்ததாக செய்தி இடம்பெற்றுள்ளது.
Comments
Post a Comment